சீரற்ற பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை... பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் முன் உள்ள சவால்கள்!
டெல்லி; நாட்டின் சீரற்ற பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்உள்ள சவால்களாகும்.
நாடு விடுதலை அடைந்த பின்னர் நிதித்துறை முழுமையாக நிர்வகிக்கும் முதலாவது பெண் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். நடப்பு ஆண்டில் 2-வது முறையாக ஜூலை 5-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் கால வாக்குறுதிகளாக பல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.
வாக்குறுதிகள் அமல்?
தற்போது தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைந்த நிலையில் 2-வது முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி பட்ஜெட்டில் அறிவித்த வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் நிர்மலா சீதாரமனின் பட்ஜெட் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
நிதிமுதலீடுகள் அதிகரிக்கும்?
குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை எதிர்கொண்டுள்ளது. இதனால் அதிக அளவில் நிதிமுதலீடுகளை அதிகரிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ6,000
தேர்தலின் போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ6,000 வழங்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த ரூ87,000 கோடி தேவை. தற்போதைய பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறுமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
வேளாண்துறைக்கு முதலீடு
பொதுவாக வேளாண்துறை முடங்கிப் போய் உள்ளது. வறட்சியின் கோரத்தாண்டவம் உக்கிரமடைந்துள்ளது. இதனால் வேளாண்சார் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளது மத்திய அரசு
வேலைவாய்ப்புகளுக்கு திட்டங்கள்
அடுத்ததாக வேலைவாய்ப்பின்மை மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி போன்றவற்றால் லட்சக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பல கோடி பேர் வேலைகளை பறிகொடுத்தனர். தற்போதைய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளுக்கான பிரதான அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.