எங்க அண்ணனுக்கு தைரியம் ஜாஸ்தி.. டிவிட்டரில் உருகிய தங்கச்சி பிரியங்கா காந்தி!
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற ராகுல் காந்தியின் முடிவுக்கு மரியாதை அளிப்பதாக, அவரது சகோதரியும், காங்., பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மே 25-ந் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் புதிய தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறும் கூறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவியில் நீடிக்குமாறு ராகுல் காந்தியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். ராகுல் காந்தி பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பதவி விலக முன்வந்தனர். இதனால், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி வாபஸ் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக தனது ராஜினாமாவை நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் 4 பக்க கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். கட்சியை மீண்டும் வலுப்படுத்த கடுமையான முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரரின் இந்த முடிவு குறித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, ராகுல் செய்தது போன்று செய்ய சிலருக்கு மட்டுமே தைரியம் இருக்கும். உங்களின் முடிவுக்கு மரியாதை அளிக்கிறேன் என்று குறிபிட்டுள்ளார்.
Few have the courage that you do @rahulgandhi. Deepest respect for your decision. https://t.co/dh5JMSB63P
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 4, 2019
2017-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்டார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து, ஜூலை 3-ந்தேதி தலைவர் பதவியை விட்டு விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.