சர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக.. ஜி7 நாடுகளுடன் இணைந்து போராட எப்போதும் தயார்.. பிரதமர் மோடி
டெல்லி: சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராட, உலகின் பணக்கார ஜி 7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எப்போதுமே தயாராக உள்ள ஒரு நட்பு நாடாகவே இருக்கும் எனப் பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பேசியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
Recommended Video
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்டது ஜி7 கூட்டமைப்பு. இந்த ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரிட்டன் நாட்டில் நடைபெற்றது
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்
வேக்சின் காப்புரிமை ரத்து.. ஒரே உலகம் ஒரே சுகாதாரம்.. ஜி7 மாநாட்டில் மோடி முக்கிய கோரிக்கை.. பின்னணி
நட்பு நாடு
சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராட, உலகின் பணக்கார ஜி 7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எப்போதுமே தயாராக உள்ள ஒரு நட்பு நாடாகவே இருக்கும் எனப் பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பேசியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் கொரோனாவுக்கு பின் உலகை மீண்டும் கட்டமைப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ள Build Back Better World முன்னெடுப்பு குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்யப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா
அதேநேரம் கிழக்கு மற்றும் தென் சீன கடலில் சீனாவின் நடவடிக்கை குறித்தும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மற்ற தளங்களில் விவாதங்கள் நடந்து வருவதால் ஜி7 மாநாட்டில் இது எழுப்பப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். அதேபோல கொரோனாவின் தோற்றம் குறித்து முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இதில் வலியுறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச அச்சுறுத்தல்கள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில், சர்வாதிகாரம், பயங்கரவாதம், போலி செய்திகள், பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் போராட, ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எப்போதுமே தயாராக உள்ள ஒரு நட்பு நாடு என்று பிரதமர் மோடி பேசியதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் பி. ஹரிஷ் குறிப்பிட்டார். மேலும், அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு இணையச் சூழலை உறுதிப்படுத்தும் பொறுப்பு டெக் நிறுவனங்களும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கும் உள்ளதாக மோடி தெரிவித்தார்.
அறிவுசார் காப்புரிமை
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் அறிவுசார் காப்புரிமை தொடர்பான TRIPS ஒப்பந்தத்தை வேக்சின் உற்பத்தியில் விலக்கு அளிக்க வேண்டும் என இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முன்மொழிந்துள்ளது. இதற்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டதாகவும் இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி டோஸ்கள் நன்கொடை
இந்தியா போன்ற நாடுகளுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே கொரோனா தடுப்பூசி அதிகம் உற்பத்தி செய்ய முடியும் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். மேலும், வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் நன்கொடையாக வழங்கவும் இந்த மாநாட்டில் ஜி7 நாடுகள் உறுதி அளித்தன.