கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க... டெல்லி நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீதான வழக்கை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு, டெல்லி பட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணுகுப்தா எனபவர் வழக்கு தொடர்ந்தார்.
தாம் ஒரு இந்து என்பதால், மனு தாக்கல் செய்ததாக மனுதாரர் விளக்கமளித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து மதத்திற்கு எதிராக கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கமல்ஹாசன் விளக்கம்
நேற்று, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், முழு பேச்சையும் கேட்காமல், தம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன்... திருமாவளவன் பேட்டி
வழக்கு தள்ளுபடி
முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் வழக்கு தொடர்ந்தார். கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
நீதிமன்றம் உத்தரவு
அப்போது, கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகக்கோரி அறிவுறுத்தியுள்ளது.
முன்ஜாமீன் கோரி மனு
இதற்கிடையே, அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.