மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு.. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட உச்சநீதிமன்றம் கெடு
டெல்லி: இறுதிசெய்யப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை வெளியிடுவதற்கான இறுதி காலக்கெடுவை ஜுலை 31ம் தேதி என்பதை ஆகஸ்ட் 31 ம் தேதியாக மாற்றி வழக்கை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் ஊடுருவிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு வரைவு பட்டியலில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதில் லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கூடுதல் வரைவு பட்டியல் கடந்த ஜுன் 26 ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது ஏற்கனவே பதிவேட்டில் இருந்த ஒரு லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 20 சதவீதம் பேரை சேர்ப்பது மற்றும் நீக்குவது குறித்து சரிபார்ப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதாக கூறியது.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி ஆர் எப் நரிமன் தலைமையிலான அமர்வு இன்று மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. ஏற்கனவே 76 லட்சம் பேரின் விவரங்களை அரசு சரிபார்த்துள்ளதால் செய்திருப்பதால் மீண்டும் சாரிபாக்க வேண்டிய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் இறுதிசெய்யப்பட்ட அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை வெளியிடுவதற்கான இறுதி காலக்கெடுவை ஜுலை 31ம் தேதி என்பதை ஆகஸ்ட் 31 ம் தேதியாக மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் என் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.