நாளை மறுநாள் 4-வது கட்ட தேர்தல்... இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மோடி, ராகுல் அனல் பேச்சு
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலின் 4-வது கட்டமாக 71 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. முதல் கட்டமாக கடந்த ஏப். 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 18-ம் தேதி 95 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக 23-ம் தேதி 117 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை 303 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது.
இந்தநிலையில், மக்களவைத் தேர்தலுக்கான 4-வது கட்ட ஓட்டுப்பதிவு வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல்வர் கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடும் சிந்த்வாரா தொகுதி உள்பட பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்தியப்பிரதேசம் (6), மகாராஷ்டிரா (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்கம் (8) உள்ளிட்ட மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் 6 மணியுடன் நிறைவு பெற்றது.
உத்தரபிரதேசத்தில் உள்ள கண்ணூஜ் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மகா கூட்டணி என கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சியினர், நாட்டை பற்றி கவலைபடுவதில்லை, தங்களது வாரிசுகளின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று பேசினார். மேலும், மற்றவர்களை போல உருளைக்கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய் வாக்குறுதி அளிக்க மாட்டோம் எனத் தெரிவித்த பிரதமர், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
இதே போல், உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமான முடிவு என குற்றம்சாட்டினார். நாட்டில் உள்ள இளைஞர்களில் யாராவது ஒருவர், காவலாளி மோடி எனக்கு வேலை வாய்ப்பை தந்தார் என சொல்ல முடியுமா? காரணம், 45 ஆண்டில் இருந்ததை விட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது என்றார்.