எதிர்பாராத டிவிஸ்ட்.. நிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன்.. தமிழகத்தை சேர்ந்த 6வது தலைவர்!
நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: தமிழ்நாட்டுக்கு அடிச்சது யோகம்.. மத்திய நிதி அமைச்சர் பதவியைப் பெற்ற 6-வது தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன்!
மோடியின் முதல் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார் நிர்மலா. பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி என்பது நாட்டின் பாதுகாப்பை உள்ளடக்கிய துறை. உள்துறை, நிதித்துறைக்கு அடுத்தபடியாக வருவது. மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு, முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்தான் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் இன்னொரு வரலாறு படைத்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்திரா காந்திக்குப் பிறகு நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் என்பதே அது. அதை விட தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் ஆன முதல் பெண் என்பது கூடுதல் சிறப்பாக மாறியுள்ளது.
அலங்கரித்தனர்
நிர்மலா சீதாராமன் ஒட்டுமொத்தமாக தமிழகத்திலிருந்து நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்திருக்கும் 6வது தலைவர் ஆவார். இதற்கு முன்பு ஆர்.கே.சண்முகம் செட்டியார், டிடி கிருஷ்ணமாச்சாரியார், சி.சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகியோர் நிதியமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளனர்.
கவனிப்பு
எங்கே போய் பணியாற்றினாலும், நிர்மலா சீதாராமனை தமிழகத்து பெண்ணாகதான் நம் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதனால்தான் எம்பிக்களின் வரிசையில் நிர்மலாவின் செயல்பாடுகள் தமிழக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
காவிரி விஷயம்
இவர் கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் என்பவர் நடுநிலையுடன் இல்லாமல் கர்நாடகா பக்கம் சாய்வது என்பது அடிக்கடி நிகழக்கூடியதாக இருந்தது. குறிப்பாக காவிரி விஷயத்தில்! அதனால்தான் தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வருத்தம் நிர்மலா மீது இருந்து கொண்டே இருக்கிறது.
பிரச்சாரம்
அடிக்கடி தமிழகம் பக்கம் வந்து கொண்டிருந்தவர் திடீரென தனது வருகையை கொஞ்ச நாளைக்கு முன்னாடி குறைத்து கொண்டு விட்டார். அதுவும் முக்கியமான தேர்தல் நேரத்தில் நிர்மலாவை தமிழ்நாட்டு பக்கமே காணோம். அதன் கட்சியின் மாநில தலைவர் தமிழிசைக்குகூட இவர் ஆதரவாக பிரச்சாரம் செய்ய வரவே இல்லை. இது குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியே வந்தது.
முக்கிய பதவி
ஆனால் தமிழகத்தின் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக்கும் அளவுக்கு கட்சி மேலிடம் நிர்மலாவை உயரத்தில் வைத்து பார்க்க நினைத்ததால், எப்படியும் அவரை கைவிட்டு விடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, இன்னும் உயரத்தில் நாட்டின் நிதியமைச்சர் என்ற பொறுப்பையே தூக்கி கொடுத்து அழகு பார்த்துள்ளது. இது நிர்மலா சீதாராமன் பல தருணங்களில் கட்சிக்காக காட்டிய விசுவாசம் என்றே பார்க்கப்படுகிறது.
அச்சாணி
2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு, நிதித்துறை என்பது அச்சாணி போல விளங்ககூடியது. பணவீக்கம், ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி, உள்நாட்டு சந்தை மதிப்பு, அந்நிய செலாவணி குறித்த விஷயங்களை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருப்பவர்களே சாமர்த்தியமாக இந்த பொறுப்பை வகிக்கக்கூடும்.
நிதித்துறை சீர்திருத்தங்கள்
அதனால் அருண் ஜேட்லியின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது. அனுபவம் இல்லாத ஒரு அரசியல்வாதியிடம் எங்கே நிதித்துறை சிக்கி கொள்ளுமா என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் அனுபவம் வாய்ந்த நிர்மலா சீதாராமன் வசம் அது போயுள்ளது. மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் வரிசையில் நிர்மலா சீதாராமனும் நிதித்துறையில் நவீன சீர்திருத்தங்களை கொண்டு வர காரணமாக இருப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
எதிர்பார்ப்பு
நிர்மலா சீதாராமன் நியமனம் எதிர்பாராத ஒன்றுதான்... ஆனால் அவர் எப்படி சாதிக்கப் போகிறார் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.