கடைசி வரை இஎம்ஐ, லோன் பற்றி வாய் திறக்காத நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. மக்கள் பெரும் ஏமாற்றம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இஎம்ஐ, லோன் பற்றி கடைசி வரை வாய் திறக்கவில்லை, இதனால் லோன், வாங்கிவிட்டு தற்போது ஊரடங்கால் கட்டமுடியாமல் அவதிப்படும் நடுத்தர மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 660 பேருக்கு மேல் பரவி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நேற்று தொடங்கி வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரித்துள்ளது.
உற்பத்தி துறை பாதிப்பு
இதனால் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா தொழில்கள், சிறுகுறு வியாபாரங்கள், ரியல் எஸ்டேட், ஜவுளி உற்பத்தி, ஐடி பணிகள், கட்டுமான பணிகள், ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் விற்பனை, நகை விற்பனை, ஜவுளி விற்பனை, உணவக தொழில், என மொத்த இந்திய பொருளாதாரமும் முடங்கி உள்ளது.
இஎம்ஐ கடன் தவணை
இந்நிலையில் மத்திய அரசு மாத சம்பளதாரர்களுக்கு ஊரடங்கால் வேலைக்கு வராவிட்டாலும் சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் மாத சம்பளதாரர்கள் கடன் வாங்கியிருந்தால் இஎம்ஐ கட்டுவதில், கடன்களுக்கு வட்டி கட்டுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. வாடகை செலுத்துவதிலும் எந்த பிரச்சனையும் அவர்களுக்கு ஏற்படாது,
கடனை எப்படி கட்டுவது
ஆனால் வாகன கடன், மகளிர் லோன், மாத கடன், பர்சனல் லோன், வீட்டுக்கடன், நகைக்கடன் என பலவகையில் கடன் வாங்கிய அன்றாட கூலி தொழிலாளிகள், சிறுகுறு வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், தள்ளுவண்டிக்கடைகாரர்கள் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அன்றாட வருமானமே அடுத்த நாள் பிழைப்பை ஒட்ட உதவும். ஆனால் 21 நாட்கள் முடக்கம் என்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் வாங்கியுள்ள கடன்களை எப்படி கட்டுவது என்று தெரியாமலும், வீட்டு வாடகையை எப்படி கொடுப்பது என்று தெரியாமலும், சிலர் கடை வாடகைகளை எப்படி அளிப்பது என்று தெரியாமலும் அல்லாடி வருகிறார்கள்.
வாய் திறக்காத அமைச்சர்
ஒருபக்கம் உயிரை காப்பாற்றிக்கொள்ள வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள் மறுபக்கம் வாழ்வாதாரம் இல்லாமல் வருமானமும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே அடுத்த ஒரு மாதத்திற்கு வாகன கடன், மகளிர் லோன், மாத கடன், பர்சனல் லோன், வீட்டுக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவறை கட்ட கால அவகாசம், வட்டி தள்ளுபடி உள்ளிட்டவற்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் இன்று கொரோனா நிவாரணம் அறிவித்த நிதியைமைச்சர் நிர்மாலா சீதாராமன் இஎம்ஐ, லோன் பற்றி கடைசி வரை வாய் திறக்கவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.