சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவில் உள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால்தான் இது போன்ற பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வங்கிகள் இணைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி
இன்று டெல்லியில் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே விலைவாசி ஏறவில்லை. தொழில்துறை உற்பத்தியின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறி தெரிகிறது.
வட்டி குறைப்பு
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. செப்டம்பர் 19-ஆம் தேதி பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன.
சீர்திருத்தம்
நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும்; உற்பத்தி தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளன. வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஏற்றுமதிக்கு 6 விதமான வரிச்சலுகை அளிக்க முடிவு செய்துள்ளோம். ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு 2020 ஜனவரியில் அமலாகும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
ஓலா, ஊபர் பயன்பாட்டினால்தான் வாகன உற்பத்தி மந்த நிலையில் இருக்கிறது என நிர்மலா சீதாராமன் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.