சிறு, குறு தொழில்கள், ரியல் எஸ்டேட்டை காப்பாற்ற சலுகை மழை.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள்
டெல்லி: கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பேக்கேஜ் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், சிறு, குறு தொழில்களுக்கு பல்வேறு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Recommended Video
இன்று மாலை 4 மணிக்கு நிருபர்களை சந்தித்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் நேற்று ஹிந்தியில் கூறிய Atma-nirbhar Bharat Abhiyan என்ற வார்த்தைக்கு தமிழில் சுய சார்பு பாரதம் என்று அர்த்தம். இதனால் நாம் உலக நாடுகளிலிருந்து தனித்துவிட மாட்டோம். சுய சார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
'ஆத்மனிர்பார் பாரத்தின் ஐந்து தூண்கள் இவைதான்- பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்புள்ள மக்கள் மற்றும் தேவை. பிரதமர் கூறியதை போல, நாம் என்95 மாஸ்க், பிபிஇ கிட்கள் தலா 2 லட்சம் தயாரித்துள்ளோம். நம்மிடம் திறமையுள்ளது. ஆத்மனிர்பார் என்பது இந்தியாவை தனிமைப்படுத்துவது அல்ல, இது உள்ளூரை உலகிற்கு எடுத்துச் செல்வது.
இதற்கு ஏற்ப, நமது கவனம் நிலம், தொழிலாளர், பணப்புழக்கம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் இருக்கும். இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல சலுகைகள் வழங்கப்படும்.
ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம்.. அரசு ஒப்பந்தங்களை முடிக்க 6 மாதங்கள் கூடுதல் கால அவகாசம்: நிர்மலா
பிணை இல்லாத கடன்
சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ .3 லட்சம் கோடி மதிப்புள்ள பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படும். 2020ம் ஆண்டு அக்டோபர் 31 வரை இந்த கடன் கிடைக்கும். இது 4 வருடங்களுக்கான கடன். ஓராண்டுக்கு, கடன் தவணை கிடையாது. அதாவது அந்த ஓராண்டுக்கு அசல் வசூலிக்கப்படாது. அதிகபட்சம் ரூ.25 கோடி கடனுள்ள நிறுவனங்கள் இந்த கடனை பெற முடியும். அதேபோல அதிகபட்சமாக ரூ.100 கோடி வரை வர்த்தகம் செய்வோர் வரை, இந்த சலுகையை பெற முடியும். இதனால், நாட்டில் உள்ள 45 லட்சம், சிறு குறு தொழில் நிறுவனங்கள், பணிகளை துவங்க முடியும். வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். இதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
இ.பி.எப் சலுகை
இன்று 15 வகை அறிவிப்புகள் வெளியிட உள்ளேன். அதில் 6 அறிவிப்புகள் சிறு, குறு தொழில்கள் தொடர்பானது. 2 விஷயங்கள், தொழிலாளர் நிதி சார்ந்தது, 2 சிறு தொழில்களுக்கு மற்றும் 3 விஷயங்கள் வரி சார்ந்தவையாக இருக்கும். அமைப்பு ரீதியிலான தொழிலாளர்களை பொறுத்தமட்டில், இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய மாத சந்தாவான 12 சதவீதம், தொழில் நிறுவன அதிபர்கள் செலுத்த வேண்டிய அதே அளவு தொகையையும் அடுத்த 3 மாதங்களுக்கு மத்திய அரசே செலுத்தும். இந்த சலுகை அதிகபட்சமாக 100 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். அதிலும் ஒரு நிபந்தனை உண்டு. அப்படி பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீத ஊழியர்களின் மாத ஊதியம் ரூ .15,000 க்கும் குறைவாக இருப்பது அவசியம்.
பல கோடி தொழிலாளர்கள்
மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான இ.பி.எப் தொகை இதனால் மிச்சமானது. இப்போது, அது மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை, ஆக. மாதங்ளுக்கான தொழிலாளர்களின் பி.எப். பங்களிப்பையும் அரசு வழங்கும் என்று நிர்மலா இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். ரூ.6750 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 4.3 கோடி ஊழியர்கள் பலனடைவார்கள்.
வருமான வரி சலுகை
டிடிஎஸ் வரிவிகிதம் 25% குறைக்கப்பட்டுள்ளது, டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைப்பு அமலில் இருக்கும். இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். 2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட்
இந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டிய, அரசு, ஒப்பந்த பணிகள் அனைத்தையும் மேலும் 6 மாதங்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி நீட்டிக்கப்படும். எனவே இதற்காக தனியாக விண்ணப்பங்களை நிரப்பி கொடுக்க வேண்டியதில்லை. கூடுதலாக 6 மாதங்கள் சலுகை வழங்கப்படுவதற்கான சான்று அரசால் கொடுக்கப்படும். தொழிலாளர் பற்றாக்குறை, உள்ளிட்டவற்றால் ரியல் எஸ்டேட் துறை அவதிப்படுவதால், இந்த கால நீட்டிப்பு அவர்களுக்கு பலனளிக்கும். ரூ.200 கோடி வரையிலான டெண்டர்களை பெற இந்திய நிறுவனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது.
நேரடி பண பரிமாற்றம்
நேரடி பணப் பரிமாற்றம், மைக்ரோ இன்ஷூரன்ஸ் திட்டங்கள், பி.எம். அவாஸ் யோஜனா, பி.எம். உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத் மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை அரசின் முக்கிய சீர்திருத்தங்கள், அவை ஏழைகளுக்கு பெரிய அளவில் பயனளித்தன. ஏழைகளுக்கு இதுவரை ரூ18 ஆயிரம் கோடி மதிப்பிலான 48 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பொருளாதார செயல் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும், தானியங்கள் வழங்கப்படும். அனைத்து வரி செலுத்துவோருக்கும், ரூ.18,000 கோடி திருப்பிச் செலுத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்தோம், பணப்புழக்கம் மக்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கம். இதன் மூலம், 14 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.