அலிகார் பல்கலை.யின் 1,000 மாணவர்கள் மீது வழக்கு.. பல பிரிவுகளில் எப்.ஐ.ஆர்.. உ.பி. போலீஸ் கெடுபிடி
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் 1,000 மாணவர்கள் மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. எந்த மாணவரின் பெயரையும் எப்ஐஆரில் போலீஸ் தெரிவிக்கவில்லை. அடையாளம் தெரியாத மாணவர்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
10,000 மாணவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் முதலில் கூறியிருந்தனர், ஆனால் ஏ.என்.ஐ ஒரு மூத்த உ.பி. காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டி "ஒரு எழுத்தில் தவறு நடந்துவிட்டது ... 1,000 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர 10 ஆயிரம் பேர் அல்ல" என்று கூறியுள்ளது.
"அவர்கள் சட்டவிரோதமாக தேச விரோத கோஷங்களை எழுப்பினர். கற்களை வீசி போலீஸ் வாகனங்களை சூறையாடினர்" என்று எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வலுவை பயன்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது.
"அவர்கள் கண்ணீர்ப்புகைக்கு கலையாததால், லேசான தடியடி செய்யப்பட்டது" என்கிறது எப்.ஐ.ஆர். இந்திய தண்டனைச் சட்டம், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்று மாலையுடன் நிறைவடைந்தது பிரச்சாரம்.. நாளை மறுநாள், ஊரக உள்ளாட்சிகளுக்கு 2ம் கட்ட தேர்தல்
டெல்லியின் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதையடுத்து, அதை கண்டித்து, டிசம்பர் 15 நள்ளிரவில் நூற்றுக்கணக்கான அலிகார் மாணவர்கள் ஒற்றுமை பேரணியை நடத்தினர்.
அலிகார் மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியதுமே, உ.பி. போலீசார் பல்கலைக்கழக வாசல்களில் அவர்களைத் தடுக்க முயன்றனர். தடியடி, கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளை இதற்காக போலீசார், பயன்படுத்தினர். ஆயினும், காவல்துறையினர் பைக்குகளை மாணவர்கள் அடித்து நொறுக்குவதை போல காட்டும் வீடியோக்கள் மறுநாள் வெளியாகின.