டெல்லி ஸ்டார் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. கைக்குழந்தை உட்பட 17 பேர் உடல் கருகி பலி
டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்தில் 9 பேர் கருகி பலியானார்கள்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று விடிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இன்று விடிகாலை சுமார் 4 மணியளவில், திடீரென ஓட்டலுக்குள் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை நேரம் என்பதால் எல்லோருமே நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.
உடல் கருகினர்
இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 26 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். ஆனாலும் தீ விபத்தில் சிக்கி 9 பேர் கருகி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாயின.
3 மணி நேர போராட்டம்
மேலும் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஜன்னல் வழியாக குதித்தார்
இவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத்திணறியே உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக தீ விபத்தில் சிக்கி விட்டோம் என்பதை அறிந்த ஒரு பெண் கையில் குழந்தையுடன் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். ஆனாலும் குழந்தையுடன் சேர்ந்தே அவர் பரிதாபமாக உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது.
17 பேர் பலி
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 34 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் ராம் மனோகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதால், டெல்லி மாநகரம் அதிர்ந்து கிடக்கிறது.