நேதாஜியின் ராணுவத்தின் முதுபெரும் வீரர்கள்.. முதல்முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு
Recommended Video
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 4 தலைவர்கள் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேருக்கும் 90-க்கு மேல் வயதாகிறது.
சுதந்திர இந்தியாவுக்காகவும் வெள்ளையனை எதிர்க்கவும் இந்திய தேசிய ராணுவத்தை 1942-ஆம் ஆண்டு தேசியவாதியான ராஷ் பிஹாரி போஸ் தொடங்கினார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்துக்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமையேற்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்க்க சிறைவாசிகளை களத்தில் இறக்கினார். ஆங்கிலேயருடனான போரின் போது இந்திய தேசிய ராணுவத்தில் ஏராளமானோர் சேர்ந்தனர்.
முக்கியமானவர்கள்
தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் முக்கிய பங்காற்றியுள்ளது இந்த ராணுவம். இதில் இந்தியாவின் லட்சுமி ஷேகால், மலாயாவைச் சேர்ந்த ஜான் திவி மற்றும் ஜானகி ஆதினஹப்பன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்.
குடியரசு தினவிழா
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் முதல் முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாக்மால்
அதன்படி இன்று நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஐஎன்ஏவை சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேரின் வயதும் 97 முதல் 100 வரை இருந்தது. இதில் மிகவும் பழமையான வீரர் என்றால் பாக்மால். இவருக்கு வயது 100 ஆகும்.
எங்கு வசிப்பு
இவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1942-ஆம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்தார். தற்போது இவர் ஹரியானாவின் மானேஸ்வரில் வசித்து வருகிறார். பஞ்சகுலாவைச் சேர்ந்த லலித் ராம் (98), ஹரியானாவின் நார்நாலை சேர்ந்த ஹிரா சிங் (97), சண்டீகரை சேர்ந்த பர்மானந்த் யாதவ் உள்ளிட்டோரும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.
|
4 பேர் மட்டும் ஏன்
வெறும் நேதாஜியின் ராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டும் அணிவகுப்பில் கலந்து கொண்டது ஏன் என மேஜர் ஜெனரல் ராஜ்பால் பூனியாவிடம் கேட்டபோது நேதாஜியின் ஐஎன்ஏவைச் சேர்ந்த வீரர்கள் இன்னும் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக இருக்கிறது. அணிவகுப்பில் கலந்து கொண்ட 4 பேரும் டெல்லியை சுற்றியிருப்பவர்கள் என்பதால் எளிதில் அடையாளம் காண முடிந்தது என்றார்.