தட்டி தூக்கிய காங்கிரஸ்.. மடமடவென சரிந்த பாஜக செல்வாக்கு.. இமாச்சல் தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள்
டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பாஜகவுக்கு இந்த முறை மக்கள் வாக்களிக்காமல் போக 5 முக்கிய காரணங்களைப் பார்க்கலாம்.
இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாகக் கடந்த. நவ. 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து இப்போது நடந்து வருகிறது.
இதுவரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறியே ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த முறையும் அதேபோல எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தபால் ஓட்டு எண்ணிக்கை.. இமாச்சல பிரதேசத்தில் முன்னிலை பெற்ற பாஜக... முதலிலேயே பின்தங்கிய காங்கிரஸ்
இமாச்சல பிரதேசம்
மொத்தம் 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் இப்போது காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சி அங்குத் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும். ஆளும் பாஜக அங்கு 24 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் அங்கு 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். கடந்த 1985க்கு பிறகு ஆளும் கட்சி இமாச்சலில் வென்றதே இல்லை என்ற நிலை, இந்தத் தேர்தலிலும் தொடர்கிறது.
ஜெய்ராம் தாக்கூர்
இன்று காலை பாஜக வெல்லும் என்றும் ஜெய்ராம் தாக்கூர் இம்மாச்சல பிரதேச முதல்வராகத் தொடர்வார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவை எல்லாம் நிறைவேறாத ஒன்றாகிவிட்டது. குஜராத்தில் பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் மிக மோசான தோல்வியடைந்த போதிலும், இமாச்சலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பெற்றுள்ளது. இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதை நாம் பார்க்கலாம்.
முதல் காரணம்- அதிருப்தி
முதலில் ஆளும் அரசின் மீதான அதிருப்தி. இமாச்சல பிரதேச மக்கள் கடந்த 37 ஆண்டுகளாக ஒரு முறை கூட ஆட்சியில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்தது இல்லை. இமாச்சல பிரதேசத்தின் இரு பவர்புல் முதல்வர்களான காங்கிரஸின் வீரபத்ர சிங் மற்றும் பாஜகவின் பிரேம் குமார் துமாலால் கூட ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. இந்த நிலையை மாற்ற இமாச்சல பிரதேசத்தில் பாஜக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது. பிரதமர் மோடியும் கூட பல முறை நேரடியாகவே அங்குச் சென்று பிரசாரம் செய்தார். இருப்பினும், அதைத் தாண்டி ஆளும் அரசு மீது இருந்த அதிருப்தி காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது.
அரசு ஊழியர்கள்
இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் கணிசமாக உள்ளனர். அங்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், அதாவது 5 சதவீத வாக்குகள் அரசு ஊழியர்களுக்கு உள்ளது. இவர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. பாஜக இதுபோன்ற வாக்குறுதியைத் தராதது அக்கட்சிக்குத் தோல்வியைக் கொடுத்துள்ளது.
நிர்வாக குளறுபடி
அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் நேர்மையான நபராக அறியப்பட்டாலும் கூட அவருக்கு நெருக்கமானவர்கள் அரசை நேர்மையாக நடத்தவில்லை என்ற புகார் உள்ளது. மேலும் அரசு நிர்வாகத்திலும் பல குளறுபடிகள் நடந்தன. தலைமைச் செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்பட்டன. காவல்துறை ஆட்சேர்ப்பு ஊழல், அரி நகர் பஞ்சாயத்து அறிவிப்பு மற்றும் சிம்லா வளர்ச்சித் திட்டம் உள்ளிட்டவை ஜெய்ராம் தாக்கூர் இமேஜை பாதித்தது. மேலும், சிட்டிங் எம்எல்ஏ 11 பேருக்கு சீட் தராததும் பாஜக வாக்கு வங்கியைப் பதம் பார்த்தது.
ஆப்பிள் விவசாயிகள்
மேல் இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகள் அதிகம். அதானி குழுமம் வழங்கிய இந்த முறை ஆப்பிள்களுக்குக் குறைந்த விலையை வழங்கியது ஆப்பிள் விவசாயிகளை ஆத்திரப்படுத்தியது. மேலும், ஆப்பிள்களை வைக்கும் அட்டைப்பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி அவர்கள் லாபத்தை மேலும் குறைத்தது. விவசாயத்தை காப்ரேட் மயமாக்க முயல்வதாகச் சொல்லப்பட்ட பிரசாரமும் ஓரளவுக்கு நன்கு கை கொடுத்தது. இதுவும் கூட மக்களை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க வைத்திருக்கலாம்.
கடைசி காரணம்- அக்னிபாத்
ஒவ்வொரு ஆண்டும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் ராணுவத்தில் இணைவார்கள். இந்தாண்டு மத்திய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டம், அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற இந்த புதிய திட்டம் ராணுவத்திற்குத் தயாராகும் இளைஞர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அடுத்த கேஸ் சிலிண்டர் முதல் பல பொருட்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வந்தன. இவை அனைத்தும் சேர்ந்து பாஜக வாக்கு வங்கிய பெருவாரியாகக் குறைத்துவிட்டது.