800 செம்மறியாடுகளை ஓடவிட்டு... சீனாவை தெறிக்கவிட்ட வாஜ்பாய்.. இப்படியும் ஒரு வரலாறு இருக்கிறது!
டெல்லி: சீனாவுடனான மோதல்கள் தொடர்பான அரசியலில் 1965-ல் இளம் எம்.பி.யாக இருந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய 800 செம்மறியாடுகள் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியா- சீனா எல்லை மோதல் நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தொடர்கிறது. 1962-ம் ஆண்டு யுத்தத்துக்குப் பின்னர் மீண்டும் இருநாடுகளிடையே யுத்த பதற்றம் உருவாகியுள்ளது.
இருநாடுகளிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் எல்லையில் சீனாவின் சீண்டுதல் போக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
சீனா நடத்துவது வெறும் எல்லை மோதல் மட்டுமல்ல.. அதற்கு மேல் 'நிறைய' இருக்கு.. பரபர பின்னணி
சீனாவும் செம்மறியாடுகளும்
1962-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சீனா நடத்திய யுத்தம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. இதே நினைப்புடன்தான் மீண்டும் ஒரு யுத்தத்தை நடத்த மிகவும் மெனக்கெட்டு கொண்டிருந்தது சீனா. இதற்கு பிள்ளையார் சுழியாக செம்மறியாடுகள் விவகாரத்தை கிளப்பியது சீனா. இது நிகழ்ந்தது 1965-ம் ஆண்டு.
800 ஆடுகளை காணவில்லை
அப்போது இந்திய அரசுக்கு சீனா ஒரு கடிதம் அனுப்பியது. அதில், எல்லையில் இந்திய வீரர்கள் 800 செம்மறியாடுகளையும் 59 காட்டு எருதுகளையும் திருடிவிட்டனர் என்ற புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை எழுத்துப்பூர்வமாகவே இந்திய அரசும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் ஒருமனிதர் மட்டும் இதை எளிதாகவிடவில்லை. அவர்தான் வாஜ்பாய்.
சீனா தூதரகத்துக்குள் 800 ஆடுகளை ஓடவிட்டார்
1965-ல் வாஜ்பாய் தேசத்தின் இளம் எம்.பி.யாக, ஜனசங்கத்தின் துடிப்புமிக்க தலைவராக இருந்தார். சீனாவின் சேட்டைகளுக்கு பாடம் கற்பிக்க முன்வந்த வாஜ்பாய் ஒரு நூதனப் போராட்டத்தை டெல்லி வீதிகளில் நடத்தினார். ஆம்.. 800 செம்மறியாடுகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்து டெல்லியில் உள்ள சீனா தூதரகத்துக்குள் ஓட்டிவிட்டார் வாஜ்பாய். அந்த செம்மறியாடுகளின் கழுத்தில் எங்களை சாப்பிட்டுவிட்டு உலகத்தை காப்பாற்றுங்கள் என்கிற வாசகத்தையும் கட்டிவிட்டார் வாஜ்பாய். இது 1965-ம் ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்தது.
அலறிப் போன சீனா
இந்த செம்மறியாடு விவகாரம் சீனாவை மிகவும் கோபமடையவைத்துவிட்டது. அப்போதைய லால்பகதூர் சாஸ்திரி அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், இந்திய அரசின் ஆதரவுடன் சீனாவை அவமானப்படுத்தும் வகையில்தான் செம்மறியாடுகளை ஓடவிடும் போராட்டம் நடத்தப்பட்டது என சீனா குற்றமும் சாட்டியிருந்தது.
1967-ல் மூக்குடைந்த சீனா
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, டெல்லியில் செம்மறியாடுகளை ஓடவிட்டு போராட்டம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பதிவு செய்தது. இந்த அக்கப்போருக்குப் பின்னர் 1976-ல் சிக்கிமை குறிவைத்து படையெடுப்பு நடத்த முயன்ற சீனா மூக்குடைபட்டு திரும்பியதும் வரலாறு.