ரயில்வேக்கு ரூ.1.15 லட்சம் கோடி.. உருவாகிறது தேசிய ரயில் திட்டம்..நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
டெல்லி: ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு வசதிக்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 நிதியாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். அதேநேரம் விமான நிலையங்களை தனியார் மயம் ஆக்குவதற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பட்ஜெட் 2021-22 இருக்கும் என்று கூறி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவரித்து வருகிறார்.,
பட்ஜெட்டில் மிக முக்கியமான ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், இந்த நிதியாண்டில் ரயில்வே துறைக்கு 1.15 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது, சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அகல ரயில்பாதை வழித்தடங்கள் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100% மின்மயமாக்கப்படும்
ரயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்றும் சரக்கு ரயில் போக்குவரத்திற்கு தனிப் பாதை உருவாக்கி வருவாயை பெருக்கத் திட்டம் உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்,
பட்ஜெட் 2021... பழைய வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை... அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வந்தது. ,இனி 2ம் கட்ட, 3ம் கட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் தனியார் மயம் ஆக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.