டெல்லியில் கடுமையான மூடுபனி… விமானங்கள் புறப்பட தடை.. பயணிகள் அவதி
டெல்லி: டெல்லியில் கடுமையான மூடுபனி காரணமாக டெல்லி விமான நிலையத்தில், விமானங்கள், வருகை மற்றும் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. டெல்லியில் குளிருடன், மூடுபனியும் சூழ்ந்துள்ளதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், கடந்த சில நாட்களாக அதிக சாலை விபத்துகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் கடும் பனி காரணமாக, தற்போது விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முழுவதும் மூடுபனி சூழ்ந்திருப்பதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் புறப்பாடு தடைபட்டுள்ளது.
45 விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன், 5 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இன்று காலை 7.15 மணியில் இருந்து 9.16 மணி வரை போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், எந்த விமானமும் டெல்லியில் இருந்து புறப்பட அனுமதிக்கப்படவில்லை.
ஓடுபாதை சரியாக தெரியாததால் விமான புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், விமானம் தரையிறங்குவதில் பிரச்னை ஏற்படவில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு புறப்பட்ட மக்கள், விமானம் தாமதம் காரணமாக அவதி அடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் பனி மூட்டம் காரணமாக நேற்று 50 வாகனங்கள் ஒன்றுக் கொன்று மோதின. அதில் பெண்கள் 7 பேர் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.