எதிர்க்கட்சிகள் பலமாக இருந்தால்... நாங்கள் ஏன் போராட போகிறோம்... கொந்தளிக்கும் விவசாயிகள்
டெல்லி: நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஒன்பது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
பலவீனமான எதிர்க்கட்சி
தொடர்ந்து போராடி வருவது குறித்து விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில்,"நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் தற்போது பலவீனமாக உள்ளன. எனவே விவசாயிகள் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் ஒரு கருத்தியல் புரட்சி. இது ஒருபோதும் தோல்வியடையாது.
ஏன் ரத்து செய்யவில்லை
தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்ய முன் வரவில்லை? இதனால் எங்கள் போராட்டம் தொடரும் என்றே நினைக்கிறேன். விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டார்கள்" என்றார்.
சம்மதிக்கக் கூடாது
முன்னதாக விவசாய சட்டங்கள் குறித்து சட்டப்பிரிவு வாரியாக விவாதிக்க வேண்டும் என்று விவசாய பிரதிநிதிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுபோன்ற ஆலோசனைக்கு விவசாயிகள் சம்மதம் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது மட்டுமே போராட்டத்தை நிறுத்த ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
தலைநகரில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இருப்பினும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுவரை மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில். மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.