குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் ஜெய்சங்கர்.. நாளை மனு தாக்கல்
டெல்லி: இன்று முறைப்படி பாஜகவில் இணைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநில ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற ஜெய்சங்கர் இன்று முறைப்படி பாஜகவில் இணைந்தார். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. கடந்த மாதம் 30ந் தேதி மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
இதில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர், மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி தன்னை அக்கட்சியில் முறைப்படி இணைத்துக் கொண்டார். அவர் தேர்தலில் போட்டியிடாமல் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
எனவே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் பாராளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையின் உறுப்பினராக வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்சபா உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்று முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது
இந்நிலையில் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாக உள்ளார் ஜெய்சங்கர். குஜராத்தில் இருந்து பாஜக சார்பில் ஜெய்சங்கருடன், ஜூகல்ஜி மதுர்ஜி தாக்கூரும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
1977-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்தபோது பல குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டவர்.
குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் நல்லுறவை பேணுவதில் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுக்க துணை நின்றவர். 2009ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்திலும் முக்கிய பங்கு வகித்தவர். கடந்த முறை பாஜக ஆட்சியின்போது வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஜெய்சங்கர் பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும், துல்லியமான முடிவுகளை தருவதிலும் வல்லவராக இருந்தார். இதனால், அவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக்கி உள்ளார் பிரதமர் மோடி.