உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், ராஜ்யசபா உறுப்பினருமான ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேத்தா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் குருகிராமில் உள்ள மேத்தா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்யா ராமர் கோயில் வழக்கின் இறுதி தீர்ப்பை 2019 நவம்பரில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தான் வழங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு
இதனிடையே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.