ரூ.2 ஆயிரம் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கலாம்.. முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் யோசனை
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று, முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் எஸ் சி கார்க், பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளுக்கு பதிலாக மோடி அரசு கொண்டு வந்த ரூ .2,000 நோட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை செல்லாததாக அறிவிக்கலாம் என்றும் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில் (நவ.8) தான், பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.
அதன்பிறகு புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிறது
செல்லாது
இந்த நிலையில் 2ஆயிரம் நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கலாம் என முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் ஆலோசனை வழங்கி உள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
நாட்டின் பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் எஸ்.சி.கார்க். இவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், நம் நாட்டில் ரொக்க பண பரிவர்த்தனைகளே அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த வேகம் மிககுறைவாக இருக்கிறது. அதற்கு ஆதராமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கூறலாம்.
பரிவர்த்தணையில் இல்லை
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இப்போது புழக்கத்தில் இல்லை. காரணம் சிலர் அதை பதுக்கியுள்ளார்கள். நாட்டின் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவது இல்லை.
வங்கியில் டெபாசிட்
எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்துவிடலாம். இதற்கு எளிய வழி என்றால் வங்கியில் நோட்டுகளை டெபாசிட் செய்யக் கூறினாலே போதும். வேறு ஏதும் செய்யத் தேவையில்லை. மக்களை சிரமப்படுத்தவும் தேவையில்லை. என் கணக்கின்படி, புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் மூன்றில் ஒருபங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக உள்ளது" என்றார்.