''காங்கிரஸில் எம்.எல்.ஏ. சீட் விற்பனைக்கு''... அசோக் தன்வர் பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. சீட் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதாக ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு கட்சிகளிலும் சீட் எதிர்பார்த்து கிடைக்காதவர்கள் பல்வேறு வழிகளில் தலைமைக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் தன்வர், டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்காக தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் தியாகம் செய்துள்ளதாகவும், இருப்பினும் அதற்குரிய அங்கீகாரத்தை தர கட்சித் தலைமை மறுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சோனா(sohna) சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. சீட்டுக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டு விற்பனை நடந்ததாகவும், வெற்றி வாய்ப்பில்லாதவர்கள் எனத் தெரிந்தும் அவர்களுக்கு கட்சி சீட் கொடுத்தால் ஹரியானாவில் எப்படி காங்கிரஸ் ஆட்சி மலரும் எனக் கேள்வி எழுப்பினார்.
பல ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்ட பலரை ஒதுக்கிவைத்து விட்டு, காங்கிரசுக்கு நேற்று வந்தவர்களுக்கும், முறையாக கட்சிப் பணியாற்றாதவர்களுக்கும் எம்.எல்.ஏ.சீட் அளித்ததை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேசினார்.
காங்கிரஸ் கட்சியையும் கோஷ்டிப்பூசல்களையும் பிரிக்கவே முடியாது போல் தெரிகிறது.