முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்
முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார்
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
1930ம்ஆண்டு ஜூன் 3ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் தொழிற் சங்கங்களின் முன்னோடியாக இருந்தவர்.
1970-களில் சோஷியலிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஜனதா தள கட்சியின் தவிர்க்க முடியாத, முன்னணி தலைவராகவும் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் உயர்ந்தார்.
அசைக்க முடியாத சக்தி
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.
தனி ஈழம்
அதேபோல, வி.பி. சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். அதை தவிர தவிர்த்து தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை அமைச்சராகவும் ஜார்ஜ் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் கார்கில் போர் நடந்தது. மேலும் தனி ஈழம் அமைய வேண்டும் என்று பேசி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்தான் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ்.
மிகப்பெரிய சேவை
சென்ற வருடம் ஜுன் மாதம் தனது பிறந்த நாளை ஜார்ஜ் கொண்டாடியபோது, கூட பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ''தலைமுறைகள் கடந்தாலும் இந்தியர்கள் உங்களை நினைவில் வைப்பார்கள். இந்திய ஜனநாயகத்திற்கு நீங்கள் பெரிய சேவையை புரிந்துள்ளீர்கள். மக்களின் தலைவர் நீங்கள். வலிமைமிக்க நிர்வாக திறனை கொண்டுள்ளீர்கள்'' என்று பாராட்டுக்கள் நிறைந்து தனது வாழ்த்தினை பிரதமர் தெரிவித்திருந்தார்.
இன்று காலை மரணம்
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அதிர்ச்சி
ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல முக்கிய பதவிகளையும், தலைசிறந்த பொறுப்புகளையும் வகித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மரணம் இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.