25 வயதிலேயே எட்ட முடியாத உயரத்தை தொட்டவர்.. ஓடோடி உதவிய கரங்கள்.. போய் வாருங்கள் சுஷ்மா சுவராஜ்!
25 வயதிற்குள் அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாஜகவின் மூத்த பெண் தலைவர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
Recommended Video
டெல்லி: 25 வயதிலேயே அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாஜகவின் மூத்த பெண் தலைவர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
பாஜக தலைவர்களில் மட்டுமில்லாமல் அரசியல் உலகிலேயே அதிகம் மதிக்க கூடிய பெண் தலைவர்களில் ஒருவராக சுஷ்மா சுவராஜ் வலம் வந்தார். ஹரியானவை சேர்ந்த இவர், ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் அப்பா சிறு வயதில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர்.
அதே சமயம் சுஷ்மாவின் குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியா வந்தனர். இவர் சமஸ்கிருதம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்று உள்ளார். அதேபோல் இவர் சட்டமும் பயின்றுள்ளார்.
1973ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் சுஷ்மா வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார். 1970ல் இவர் அகில பாரதிய வித்யார்த்திய பரீஷித் அமைப்பில் சேர்ந்தார். அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கென தனி பாதையை உருவாக்கினார். கணவர் சுவராஜ் கெளஷல் மூலம் சட்டப்பிரிவிலும் கொடி கட்டி பறக்க தொடங்கினார்.
அதன்பின் எமெர்ஜென்சியில் சுஷ்மா பார்த்த கொடுமைகளை அடுத்து மொத்தமாக அரசியலில் குதித்து பாஜகவில் இணைந்தார். மெதுவாக பாஜகவில் வளர்ந்த இவர் ஹரியானா சட்டசபையில் 1977ல் இருந்து 1982 வரை எம்எல்ஏவாக இருந்தார்.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
அதன்பின் மீண்டும் 1987 டு 1990 வரை எம்எல்ஏவாக இருந்தார். 1977ல் ஹரியானாவில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றார். அதோடு 1979ல் ஹரியானா மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார். இத்தனை சாதனைகளையும் பெண்ணாக இருந்து கொண்டு இவர் 27 வயதில் அரசியல் நிகழ்த்தினார்.
1978-1990 வரை அம்மாநிலத்தில் சுஷ்மா கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 1998ல் இருந்து டெல்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் உடனே அவர் அந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு வந்தார்.
1990ல் இவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1998ல் இருந்து இவர் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார். இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியில் கூட லோக்சபா தேர்தலில் நின்று இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து நின்ற இவர், தோல்வி அடைந்தார்.
தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறையை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.
2009ல் பாஜக லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்பும்கூட, லோக்சபாவில் இவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். உள்துறை அமைச்சராக கடந்த முறை இருந்த போது பல்வேறு மக்களுக்கு ஓடி ஓடி உதவினார். டிவிட்டர் மூலம் எளிதாக கோடிக்கணக்கான மக்களுக்கு அவசர காலத்தில் உதவினார்.
இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார். இவரது உடல் அப்போதே அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு தற்போது 67 வயதாகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.