பாஜக அமைதியா மட்டுமல்ல கிட்டத்தட்ட ஆதரிக்குறாங்க.. வெறுப்பு பேச்சு குறித்து போட்டுடைத்த நீதியரசர்
டெல்லி : வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், இது ஒரு கிரிமினல் செயல் என்றும், ஆளும் கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை கண்டு அமைதியாக இருப்பதோடு, அவர்களால் அது கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறிய வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்ட பல்வேறு இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. சில இந்து மதத் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு மக்களை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதிகாரிகளின் அலட்சியம்.. பெங்களூரில் நடு வானில் நேருக்கு நேர் மோதவிருந்த 2 விமானங்கள்.. ஜஸ்ட் மிஸ்
ஹரித்துவார் வெறுப்பு பேச்சு
மேலும் ஹரித்வார் நிகழ்வில் இந்து மதத் தலைவர் சாந்த் காளிசரண் மகாராஜ் பேசியபோது, அரசியலின் மூலம் தேசத்தைக் கைப்பற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்று அறிவித்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய பேச்சு வீடியோ வைரலாகிய நிலையில் காளிசரண் மகாராஜ் இந்து மதத்தை பாதுகாக்க ஒரு உறுதியான இந்துத் தலைவரை தேர்ந்தெடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தன.
பிரதமர் மெளனம்
மேலும் இதுபோன்ற பேச்சுகளை பிரதமர் கண்டிக்க வேண்டுமெனவும் கூறியிருந்தன. மேலும் ஹரித்துவார் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் எனவும், அவரது மெளனம் வெறுப்பு நிறைந்த குரல்களை ஊக்குவிக்கிறது என ஐஐஎம் மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பினர். இந்த நிலையில் ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் இந்து மதத் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரை உத்தரகாண்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிரிமினல் குற்றம்
வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், இது ஒரு கிரிமினல் செயல் என்றும், ஆளும் கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை கண்டு அமைதியாக இருப்பதோடு, அவர்களால் அது கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். சட்டத்தின் ஆட்சியின் அரசியலமைப்பு அடிப்படைகள் என்ற தலைப்பில் முக்கிய உரையை ஆற்றிய அவர், குறைந்தது சிறிது நேரம் கழித்தாவது நாட்டின் துணை ஜனாதிபதி ஒரு உரையில் வெறுப்பு பேச்சு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், வெறுப்பு பேச்சு அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, இது ஒரு குற்றச் செயலாகும் எனப் பேசினார்.
நாடாளுமன்றத்துக்கு பரிந்துரை
துரதிர்ஷ்டவசமாக நடைமுறையில், ஒரு நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் அது நடக்காது எனவும் ஏனெனில் குறைந்தபட்ச தண்டனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனக் கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்ததோடு, இது ஒரு கிரிமினல் செயல் என்றும், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான விதிகளை நாடாளுமன்றம் திருத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். மேலும் ஆளும்கட்சியின் உயர்மட்டத்தினர் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட அதை ஆமோதித்து வருவதாகவும் அவர் கூறினார்.