பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்.. வாழ்க்கை வரலாறு
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சரும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் ஜஸ்வந்த் சிங் தனது 82 வயதில் உடல் நலக்குறைவால் காலாமானார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நெருங்கிய நண்பராவார்.
வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி என பாஜகவின் நான்கு முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங். இவர் 1938 ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை தாகூர் சர்தார் சிங். தாயார் பெயர் குன்வர் பைசா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் தான் ஜஸ்வந்த் சிங் ஜசோல்.
ஜஸ்வந்த் சிங் படிப்பை முடித்த உடன் ராணுத்தில் சேர்ந்தார். ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் நுழைந்தார். 1980களில் ராஜ்யசபா எம்பியாக முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் பாஜக 1980களில் வெறும் 2 எம்பியாக இருந்த நிலையில் அதை பெரிய அளவில் வளர்த்ததில் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷியோடு ஜஸ்வந்த் சிங்கிற்கு முக்கிய பங்கு உண்டு.
முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவு
வெளியுறவு அமைச்சர்
வாஜ்பாய் முதல்முறையாக 1996ல் பிரதமராக பொறுப்பேற்ற போது மிக குறுகிய காலமே ஆட்சி இருந்தது. அப்போது அவரது அமைச்சரவையில் ஜஸ்வந்த் சிங் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிற்கு மீண்டும் 1998ம் ஆண்டு டிசம்பரில் ஆட்சி பொறுப்பேற்ற போது வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் மீண்டும் 2002ல் நிதியமைச்சராக யஷ்வந்த் சின்காவிற்கு பதிலாக பொறுப்பேற்றார். வாஜ்பாய் ஆட்சி இருந்த 2004 வரை நிதியமைச்சராக இருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்
ஜஸ்வந்த் சிங்கிற்கு 2001ம் ஆண்டு மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி விருது வழங்கப்பட்டது. 1980 முதல் 1996 வரை பலமுறை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். 2004 முதல் 2009 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஜஸ்வந்த் சிங் 2009 முதல் 2014 வரை டார்ஜிலிங் தொகுதி எம்பியாகவும் இருந்தார்.
கடும் சர்ச்சை
பாகிஸ்தானின் நிறுவனர் ஜின்னாவை - இந்தியா, பகிர்வு, சுதந்திரம் என்ற புத்தகத்தில் பாராட்டியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஜவஹர்லால் நேருவின் மையப்படுத்தப்பட்ட கொள்கை பிரிவினைக்கு காரணம் என்று கூறினார். பின்னர் ஏற்பட்ட சர்ச்சையின் விளைவாக அவர் பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். 2010 இல், அவர் பாஜகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
சுயேட்சையாக போட்டி
2014 லோக்சபா தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள பார்மர்-ஜெய்சால்மர் தொகுதியில் போட்டியிட அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது. பின்னர் அவர் சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடிவு செய்த பின்னர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் தேர்தலில் , பாஜக வேட்பாளர் கர்னல் சோனாரம் சவுத்ரியிடம் தோற்றார்.
ஜெயலலிதா ஆதரவு
2012 ல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது உண்மையான ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு இருக்க வேண்டும் என்று கூறி தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் ஆதரவை வழங்கினார். எனினும் அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹமீத் அன்சாரியிடம் தோற்றார்.