பாலகோட் தாக்குதல்: இந்தியா கையாண்ட விதம் அருமை.. முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் அதிரடி கருத்து
டெல்லி: இந்தியாவின் பாலகோட் தாக்குதல் நடவடிக்கை பொருத்தமானது, நன்கு கையாளப்பட்டது, என்று நான் கருதுகிறேன் என்று அமெரிக்க, முன்னாள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், தெரிவித்துள்ளார்.
ஜான் போல்டன், சமீபத்தில் 'தி ரூம் வேர் இட் ஹேப்பன்ட்' ( The Room Where it Happened) என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியா-பாகிஸ்தான் மோதல், இந்தியா-ஈரான் கச்சா எண்ணை கொள்முதல் விவகாரத்தில் அமெரிக்கா தலையீடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவரித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதை பார்க்கலாம் வாங்க:
பாலகோட் உள்ளே புகுந்து அடித்ததெல்லாம் சரி.. ஆனால் வீரர்களின் தியாகத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி
பாகிஸ்தான் ரியாக்ஷன்
2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானதுமே பாகிஸ்தான் எந்த மாதிரியான பதில் நடவடிக்கைகளில் ஈடுபடும்? எவ்வாறு இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்பது பற்றி நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தோம். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை என்ன அறிக்கை அளித்தது என்பது பற்றி நான் விளக்கமாக தெரிவிக்க முடியாது.
இரு தரப்புடன் பேச்சு வார்த்தை
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், நான் தொலைபேசியில் இந்த சம்பவம் தொடர்பாக ஆலோசித்தேன். இந்த சிக்கல் சரியாக கையாளப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம். பாகிஸ்தான் தரப்பிலும் தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்தி இருந்தேன். இருதரப்பும் தங்களுடைய நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். நீங்கள் எந்த நாட்டின் தலைநகரில் உட்கார்ந்துகொண்டு இருக்கிறீர்களோ அதற்கேற்ப தான் பதில் வரும் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம். இருப்பினும் டெல்லியுடன் எங்கள் தொடர்பு சற்று மேம்பட்டு இருந்தது.
சரியான நடவடிக்கை
இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எங்களது முக்கியமான நோக்கமாக இருந்தது. டென்ஷனை குறைப்பதில், இந்தியாவின் நடவடிக்கை சரியானது என்று நான் கருதுகிறேன். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களின் போது இந்தியா கட்டுப்பாட்டைக் காட்டியது மற்றும் சீரான முறையில் செயல்பட்டது. இந்த விஷயம் மீண்டும் நடப்பதை தவிர்ப்பதற்கான கவனம் வைக்க வேண்டும். பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசு, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத்தான் விரும்புகிறது.
கிம் ஜாங் உன்னுடன் முக்கிய மீட்டிங்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் பேசினோம். இருப்பினும் அமெரிக்கா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மட்டும்தான் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று அடுத்த நாள் நானும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவும், அதிபர் டொனால்டு டிரம்பிடம் இதுபற்றிப் பேசினோம். ஆனால், அதற்கு அடுத்த நாளே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் மீட்டிங் இருந்ததால் இதற்கு மேல் இந்த விஷயம் பற்றி அதிகம் ஆலோசிக்கவில்லை.
மோடி மீது அனுதாபம் இல்லை
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த பிறகும் இந்தியா அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணை பெற்று வந்தது. ஈரான் சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது இதற்கு ஒரு முக்கியமான காரணம். அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு சில காலம் இந்த தடையிலிருந்து விலக்கு அளித்து, எண்ணை கொள்முதல் செய்வதை கண்டுகொள்ளவில்லை. ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது ட்ரம்புக்கு அனுதாபம் கிடையாது. இவ்வாறு ஜான் போல்டன் தெரிவித்தார்.
Recommended Video
சர்ச்சை புத்தகம்
இந்தப் புத்தகத்தில் நிறைய ரகசிய தகவல்கள் இருப்பதால் இதை வெளியிடக்கூடாது என்று அமெரிக்க நீதித் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால் நீதிமன்றம் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர், ஜான் போல்டன், துரோகம் செய்துவிட்டதாக, குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.