அயோத்தி நிலத்தை இந்துக்களிடமே கொடுத்துருங்க.. முஸ்லீம்களுக்கு மாஜி துணைவேந்தர் யோசனை
டெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க முஸ்லீம்கள் முன்வர வேண்டும். அதுதான் நிரந்தர அமைதிக்கு ஒரே வழி. இந்த விவகாரத்தில் கோர்ட் மூலமாக எந்தத் தீர்வையும் யாரும் எட்ட முடியாது என்று அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உத்தின் ஷா கூறியுள்ளார்.
அமைதியை விரும்பும் இந்திய முஸ்லீம்கள் என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது இந்த யோசனையை அவர் முன்வைத்தார்.
ஷா பேசுகையில் அவுட் ஆப் கோர்ட் சமாதானம்தான் ஒரே வழி, சிறந்த வழி.. அது மட்டுமே அயோத்தி பிரச்சினையைத் தீர்க்க உதவும். கோர்ட் மூலமாக எந்த சாதகமான தீர்ப்பையும் யாருமே வாங்க முடியாது.
என்னைக் கேட்டால் பேசாமல் அயோத்தி நிலத்தை இந்துக்களிடமே முஸ்லீம்கள் ஒப்படைத்து விட்டால். நாட்டின் அமைதியை மனதில் கொண்டு இதைச் செய்ய முன்வரலாம். ஒரு வேளை முஸ்லீம்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தாலும் கூட நிலத்தை இந்துக்களிடமே கொடுத்து விடலாம். இந்து சகோதரர்களிடம் இதைக் கொடுப்பதன் மூலம் நீடித்த அமைதிக்கு வழி வகுக்க முடியும்.
இந்தத் தீர்வைத் தவிர வேறு நல்ல தீர்வு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இதைச் செய்யாமல் போனால் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.