4 சக்தி வாய்ந்த நாடுகள்.. அணு ஆயுதம் மீது குவியும் கவனம்.. அதிர வைக்கும் அறிவிப்புகளும், சோதனைகளும்
உலகில் நான்கு சக்தி வாய்ந்த நாடுகள் அணு ஆயுதங்கள் மீது தங்கள் கவனத்தை திருப்பி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: உலகில் நான்கு சக்தி வாய்ந்த நாடுகள் அணு ஆயுதங்கள் மீது தங்கள் கவனத்தை திருப்பி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் உலகில் எந்த நாடும் மீண்டும் அணு ஆயுத போரை விரும்பாது என்றுதான் நினைத்தார்கள். முக்கியமாக அப்போது ஜப்பான் மக்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து உலகமே அதிர்ந்து போனது.
ஆனால் நிலைமை இனியும் அப்படி இருக்காது என்றுதான் தோன்றுகிறது. உலகில் நான்கு சக்தி வாய்ந்த நாடுகள் தற்போது அணு ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கும் யோசனைக்கு வந்துள்ளது.
முதலில் என்ன
முதலில் ரஷ்யாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையில் இருந்துதான் பிரச்சனை தொடங்கியது. கடந்த இரண்டு வாரம் முன் ரஷ்யாவின் அணு சக்தி மையம் முக்கியமான ஏவுகணை சோதனை ஒன்றை செய்தது. இது தோல்வியில் முடிந்தது. ஆனால் இந்த ஏவுகணை அணு சக்தி மூலம் இயங்க கூடிய அபாயகரமான ஏவுகணை ஆகும்.
ரஷ்யா அமெரிக்கா
அணு சக்தி மூலம் இயங்க கூடிய இந்த ஏவுகணையின் பெயர் ஸ்கைஃபால் (skyfal) அல்லது உலக அழிவிற்கான ஆயுதம் (doomday weapon) என்கிறார்கள். இதை வைத்து உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் தாக்கலாம். இதை உலகில் இருந்து ரஷ்யா மறைக்கிறது என்று அமெரிக்கா தொடர்ந்து ஆதாரங்களுடன் கூறி வருகிறது.
இன்னொரு பக்கம்
இது போக இன்னொரு பக்கம் இந்தியா பாகிஸ்தான் இடையே பெரிய அளவில் சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்றிக்கொள்வதாக அறிவித்துள்ளது. அதாவது ''முதலில் அணு ஆயுத தாக்குதல்'' நடத்த கூடாது என்ற கொள்கையை மாற்றி, அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராக இருக்கும் நாடாக மாற இந்தியா திட்டமிட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அமெரிக்கா
இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவும் அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்க கூடிய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. நேற்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் இந்த சோதனையை செய்தது. இதில் ஏவுகணை சரியாக டார்கெட்டை தாக்கி அழித்தது.
சீனா என்ன
அமெரிக்காவின் இந்த சோதனைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை நொடி பொழுதில் தாக்கி அழிக்க எங்களால் முடியும் என்று சீனா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சீனாவும் அணு ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு செய்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
நான்கு நாடுகள்
ராணுவ ரீதியாக உலகில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகள் ஆகும். இந்த நான்கு நாடுகளும் அணு ஆயுதம் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இது உலகின் மற்ற நாடுகளுக்கு இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.