நான்கு மாநில தேர்தல்... காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் - காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று கூடியுள்ள நிலையில், அக்கட்சியின் புதிய தலைவர் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியுள்ளது. அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. மேலும் விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார். இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருடைய உடல்நிலை காரணமாக, அவரால் தீவிரமாக கட்சி பணியாற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் நிரந்தர தலைவர் நியமிக்கப்படாமலேயே உள்ளது.
கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினர். இதனால், இவர்கள் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல்களும், அதனால் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உட்கட்சி சண்டையால் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
இதனையடுத்து அக்டோபர் 16 அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்திருந்தார். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, திட்டமிட்டப்படி காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
திட்டமிட்டபடி இன்று காரியக்கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சோனியாகாந்தி தலைமையில் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. புதிய தலைவர் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு , கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியை மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்கும்படி வலியுறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தயாராகிவருகின்றனர். ராகுல் காந்தி மறுக்கும்பட்சத்தில் பிரியங்காவை தலைவராக்க நியமிக்க வலியுறுத்தவும் சில தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.