உடைந்தது தெலுங்குதேசம்! 3 ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜகவில் ஐக்கியம்!
டெல்லி: தெலுங்குதேசம் கட்சியின் 3 மூத்த ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி, நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் ஐக்கியமாகினர்.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பாஜக பக்கம் தாவ தொடங்கிவிட்டனர்,
முதல் கட்டமாக ராஜ்யசபா எம்.பிக்களான சுஜானா சவுத்ரி, சி.எம். ரமேஷ், ஜி. மோகன் ராவ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் பாஜகவுக்கு தாவப் போவதாக அறிவித்தனர். இவர்கள் 4 பேரும் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசி பாஜகவுக்கு தாவுவதை உறுதி செய்தனர்.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இவர்களில் சுஜானா சவுத்ரி மீது அமலாக்கத்துறை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 4 பேரும் இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் நேரில் சந்தித்து ராஜ்யசபாவில் பாஜக அணியாக அங்கீகரிக்கக் கோரி மனு அளித்தனர்.
கட்சியை இணைப்பதாக தீர்மானம்
முன்னதாக தெலுங்குதேசத்தின் நாடாளுமன்ற குழு கூட்டத்தைக் கூட்டி 4 பேரும் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர். ராஜ்யசபாவில் தெலுங்குதேசத்துக்கு மொத்தம் 6 எம்.பிக்கள் இருந்தனர். இவர்களில் 3 பேர் தற்போது பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சுஜானா சவுத்ரி, , சி.எம். ரமேஷ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மற்றொரு எம்.பி.யான ஜி.எம்.ராவ்-க்கு உடல்நலக் குறைவு என்பதால் மற்றொரு நாளில் பாஜகவில் அவர் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்குதேசம் பிளவுபடும்?
ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் சந்திரபாபு நாயுடுக்கு இந்த கட்சித் தாவல் பேரதிர்ச்சியாகும். இதேபோல் எம்.எல்.ஏக்களும் கட்சி தாவினால் தெலுங்குதேசம் கட்சியே இரண்டாக பிளவுபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
|
லோகேஷூக்கு முக்கியத்துவம்
தெலுங்குதேசம் கட்சியில் சந்திரபாபு நாயுடுவின் மகனும் பொதுச்செயலாளருமான லோகேஷுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததில் கட்சியின் மூத்த தலைவர்கள். எம்.எல்.ஏக்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு ஆந்திராவில் கட்சியை வலிமையாக்கும் முயற்சிகளை தொடங்கிவிட்டது பாஜக.