இந்தியாவையே அல்லாட வைத்த ரூபாய் 500, ரூ1000 செல்லாது அறிவிப்பு வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு!
டெல்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களையும் திகைக்க வைத்து அல்லாட வைத்து அதிர்ச்சி அளித்த பிரதமர் மோடியின் ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இனிமேல் ரூபாய் 500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். ஒரே இரவில் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு நாட்டையே திகைப்புக்குள்ளாக்கியது.
மேலும் ரூ500, ரூ1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; ஏடிஎம் இயந்திரங்கள் இயங்காது என்றெல்லாம் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் அனுபவித்த துயரங்கள் சொல்லி மாளாதவை.
ஏடிஎம் மையங்களில் தவம்
ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படாமல் போகின. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்காக மக்கள் பல மணிநேரம் பல கிலோ மீட்டர் தூரம் வரிசைகளில் நின்ற பெருந்துயரம் நிகழ்ந்தது.
வங்கி கட்டுப்பாடுகள்
பொதுமக்களில் வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் டெபாசிட் அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. இதனால் ஏழைய எளிய நடுத்தர மக்கள், சொந்த வேலைகளை விட்டுவிட்டு பணம் எடுக்கவும் கையிருப்பு பணத்தை மாற்றவும் படாதபாடுபட்டனர். வங்கிகளிலேயே, வரிசைகளிலேயே மாண்டு போனவர்கள் குறித்தும் செய்திகள் வெளியாகின.
ஏடிஎம்களில் கட்டுப்பாடுகள்
இந்தியர்களின் இந்த துயரம் 3 மாதங்களுக்கும் மேலாகவும் நீடித்தது. சுமார் ஓராண்டு காலம் ஏடிஎம்களில் குறிப்பிட்ட அளவுக்குதான் பணம் எடுக்க முடிந்தது. அன்று தொடங்கிய ஏடிஎம் கட்டுப்பாடுகள் இன்று வரை பல்வேறு வகைகளில் தொடரவே செய்கின்றன. சரி அப்படி மக்களை துயரப்படுத்தி கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்துவிட்டதா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட கறுப்பு பணம் எவ்வளவு? எதற்கும் எவரிடமும் எந்த பதிலுமே இல்லை.
பதுக்கப்பட்ட ரூ2,000 நோட்டுகள்
பழைய ரூபாய் நோட்டுகளை ஒழித்துகட்டி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பொதுமக்கள் அன்றாட செலவுக்கே வீதிகளில் அல்லாடிக் கொண்டிருந்த போது ஒருசில ஊழல்பேர்வழிகளின் வீடுகளில்தான் இந்த ரூ2,000 நோட்டுகள் கட்டு கட்டாக, பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இப்போது இந்த ரூ2,000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு அதுவும் புழக்கத்தில் குறைந்து போய்விட்டது.
பயன் தந்ததா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் சுமையை எதிர்கொள்ள முடியாத நாடு, ஜிஎஸ்டி எனும் புதிய வரிமுறைக்கு தள்ளப்பட்டது. ஒட்டுமொத்த நாடும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்குள் திணிக்கப்பட்டது. ஆனால் இது எதுவும் சாமானியர்களின் வாழ்விலும் இந்திய பொருளாதாரத்திலும் எந்தவிதமான மறுமலர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஆனால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இரவு 8 மணிக்கு உரையாற்ற போகிறார் என்கிற அறிவிப்பு வெளியானாலே ஒருவித பேரச்சம் மட்டும் மிக மிக ஆழமாக மக்களிடம் பதிந்து கிடக்கிறது என்பதுதான் உச்சகட்ட சோகம்!