விவசாயிகள் போராட்டத்தில் தொடரும் துயரம்.. 47வது நாளாக நீடிக்கும் போராட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை
டெல்லி: விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் நான்காவதாக மற்றொரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனறனர்.
தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து 47ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயி தற்கொலை
இந்நிலையில் 39 வயதான விவசாயி ஒருவர், விவசாய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விவசாயி அம்ரிந்தர் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே இதுவரை மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேடையில் விஷம் அருந்தினார்
இது குறித்து விவசாயச் சங்கங்களின் ஐடி பிரிவின் கன்வீனர் பால்ஜீத் கூறுகையில், "அவர் போராட்ட மேடைக்கு அருகிலேயே விஷம் அருந்தினார். போராடும் விவசாயிகளுக்கு முன்னிலையிலேயே அவர் மயங்கி விழுந்தார். நாங்கள் உடனடியாக அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரவு 7.20 மணியளவில் அவர் உயிரிழந்தார்" என்றார்.
உயிரிழந்த அம்ரிந்தர் சிங்
உயிரிழந்த அம்ரிந்தர் சிங்கிற்கு அவரது சொந்த கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் இருப்பதாகப் போராட்டங்களில் பங்கேற்கும் விவசாயிகள் தெரிவித்தனர். அந்த ஒரு ஏக்கர் நிலத்திலும் சரியாக விளைச்சல் இல்லாததால் அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் தனியார் பேருந்து நிறுவனத்தில் நடத்துநராக பணியாற்றத் தொடங்கினார். அம்ரிந்தருடன் அவரது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நான்காவது தற்கொலை
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டு என்பதை வலியுறுத்தி நடைபெறும் நான்காவது தற்கொலை இதுவாகும். முன்னதாக, பாபா ராம் சிங் (65), அமர்ஜித் சிங் ராய் (63), காஷ்மீர் சிங் தாஸ் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டுமே தவிர இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று விவசாயச் சங்கத் தலைவர் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார்