டெல்லியில் இன்று முதல் புதிய மின்கட்டணம்.. 200 யூனிட் வரை இலவச மின்சாரம்.. அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிய மின் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி டெல்லியில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு டெல்லி அரசு முழு மானியம் வழங்கும் என்று தெரிவித்தார். மேலும் 201 முதல் 401 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு தொடர்ந்து 50 சதவீத மின் மானியம் அரசிடமிருந்து கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் மக்கள் நேற்று வரை 200 யூனிட் மின்சாரத்திற்கு ரூ .622 செலுத்தினர், இப்போது இது இலவசம். 250 யூனிட்டுகளுக்கு அவர்கள் ரூ .800 செலுத்தினர். இப்போது அவர்கள் ரூ.252 செலுத்துவார்கள். 300 யூனிட்டுகளுக்கு, அவர்கள் ரூ.971 செலுத்தினர். இப்போது அவர்கள் ரூ.526 செலுத்துவர்.
400 யூனிட்டுகளுக்கு, அவர்கள் ரூ.1320 செலுத்தினர், இப்போது அவர்கள் ரூ .1075 செலுத்துவார்கள் என்று அவர் கூறினார்.
டெல்லி மாநலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மின் கட்டணப்படி 1,200 யூனிட்டிற்கும் குறைவாக பயன்படுத்தினால் ரூ.750 வரை சேமிக்கலாம். மேலும் தற்போது மின்நுகர்வு கட்டணத்தை உயர்த்தியும், பிக்கடு கட்டணத்தை சற்று குறைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி 2 கிலோவாட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான நிரந்தர மின் கட்டணம் ரூ.125-லிருந்து, ரூ. 20-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2 கிலோ வாட்டுக்கு அதிகமாகவும் 5 கிலோ வாட் அளவிற்குள்ளும் பயன்படுத்தும் நுகர்வோருக்கான நிரந்தர மின் கட்டணம் ரூ. 40-லிருந்து ரூ.50-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் மின்சார பயன்பாட்டு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான மின்சார பயன்பாடு 1,200 யூனிட்டிற்கு மேல் இருந்தால் மின்கட்டணம் ஒரு யூனிட்டிற்கு, 25 பைசா உயர்த்தப்பட்டு ரூ.8 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகம் அல்லாத பிரிவில் 3 கிலோ வோல்ட் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கான கட்டணம் ரூ.8 ஆக இருந்த நிலையில், தற்போது 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய கடை வைத்துள்ள வர்த்தகர்களுக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் உள்ள வர்த்தகர்கள் மிககுறைந்த அளவு மின்சாரத்தை, அதாவது 3 கேவிஏ வரை பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு துணை பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.50 வசூலிப்பதற்கு பதிலாக ரூ.6 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஒவ்வொரு நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மின்கட்டணங்கள் சமப்படுத்தப்பட்டுள்ளன.