சீனாவுக்கு எதிராக டிரண்டாகும் ''ப்ரீ திபெத்''து.. தலாய் லாமாவுக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்தும்!!
டெல்லி: திபெத்தை சீனா ஆக்ரமித்து தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டுள்ளது. அந்த நாட்டில் இருந்து பௌத்த துறவியான தலாய் லாமா வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். சீனாவை கண்டிக்கும் வகையில் இன்று தலாய் லாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஃப்ரீ சீனா என்ற வார்த்தையும் டிரண்ட் ஆகி வருகிறது.
Recommended Video
சீனா தனது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டு திபெத் நாட்டுக்குள் 1950 ஆம் ஆண்டு ஊடுருவியது. திபெத்தில் ஏராளமான இயற்கை வளங்கள் குவிந்து கிடக்கிறது. இது சீனாவின் கண்களை உறுத்தி வந்தது. ஆனால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லையாக இருக்கும் திபெத் ஒரு பாதுகாப்பு கேடயமாக இருக்கும் என்று இந்தியா கருதி வந்தது.
ஆனால், திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவின் எல்லைகளையும் தற்போது சீனா குறிவைத்து வருகிறது. இதுதான் தற்போதைய எல்லைப் பிரச்சனையாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உருவாகி இருக்கிறது. திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சீனா அதை சரியானது என்று வாதிடவும் செய்தது. 800 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஒரு பகுதியாக திபெத் இருந்தது என்று கூறியது. திபெத் தற்போது தன்னாட்சி பகுதியாக, சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
திடீருன்னு கிளம்பிய பூட்டான் எல்லை பிரச்சினை.. இந்தியாவை எதிர்கொள்ள சீனா தந்திரம்
திபெத் தன்னாட்சி:
திபெத் தன்னாட்சி பகுதியாக இருந்தாலும், சீனாதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. திபெத்தின் மரபு வழி புத்த மதத்தலைவராக தலாய் லாமாவை திபெத் மக்கள் ஏற்றுக் கொண்டாலும், சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. தலாய் லாமாவின் பேச்சை ஏற்று திபெத் மக்கள சீனப் படைக்கு எதிராக 1959 வரை போரிட்டனர். ஆனாலும், இறுதியில் திபெத் படை தோல்வியை சந்தித்தது. அப்போது தலாய் லாமாவை கைது செய்து சிறையில் அடைக்க சீனா திட்டமிட்டது.
இந்தியாவில் தஞ்சம்:
தலாய் லாமா தங்கியிருக்கும் அரண்மனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து தலாய் லாமா தப்பி 31 நாட்கள் நடைபயணத்திற்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்தார். 1959 ஆம் ஆண்டு, ஏப்ரல் 18 ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்த தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அவருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று சீனா மிரட்டல் விடுத்தது. தலாய் லாமாவை ஒப்படைக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு சீனா கோரிக்கை வைத்தது. ஆனால், நேரு மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்துதான் 1962ல் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. எல்லையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று நிலைகளை சீனா ஆக்கிரமித்தது.
பஞ்ச்சென் தேர்வு:
தலாய் லாமாவின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் பஞ்ச்சென் லாமா என்பவரை நியமித்து அவருக்கு அனைத்து அதிகாரங்களையும், முக்கியத்துவத்தையும் சீனா கொடுத்தது. ஆனால் கடந்த காலங்களில் மறைமுகமாக இருந்த பஞ்ச்சென் திபெத் மக்கள் முன் தோன்றி பேசி இருந்தார். இந்த நிலையில் திபெத்தை சீனா ஆக்ரமித்து இருப்பதை அமெரிக்கா உள்பட எந்த நாடுகளும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. சீனாவால் 'ஆக்ரமிக்கப்பட்ட திபெத்' என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது.
குவியும் வாழ்த்து
திபெத்தின் பெரும்பான்மையான மக்கள் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கிருந்து வெளியேறி இந்தியா உள்பட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கும் மக்கள் சுதந்திரம் கோரி அவ்வப்போது போராடி வருகின்றனர். இன்றும் அந்தக் குரலை சீனாவுக்கு எதிராக தூக்கிப் பிடித்து, பலரும் ட்விட்டரில் ''ப்ரீ திபெத்'' என்று டிரண்ட் செய்து வருகின்றனர். இத்துடன் இன்று 85வது பிறந்த நாள் காணும் தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.