இந்தியா பிடிக்கும்.. அதுக்காக ஒப்பந்தம் எதுவும் செய்ய முடியாது.. டிரம்ப்பின் ஜாலி டிரிப்.. ஷாக்கிங்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகையால் இந்தியாவிற்கு பெரிய பலன் எதுவும் நடக்க போவதில்லை.
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகையால் இந்தியாவிற்கு பெரிய பலன் எதுவும் நடக்க போவதில்லை. இரண்டு நாள் பயணத்தில் பெரிய ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்பட போவதில்லை.
Recommended Video
''Shit-hole Country'' பொதுவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வளரும் நாடுகளை, ஏழை நாடுகளை இப்படித்தான் விமர்சனம் செய்வார். உலகில் குறிப்பிட்ட சில நாடுகளை தவிர அவர் மற்ற எல்லா நாடுகளையும் இப்படித்தான் பார்க்கிறார்.
அதிபராக இருந்த போதும் சரி, அதிபர் ஆவதற்கு முன்பும் சரி டிரம்ப் ஏழை நாடுகளுக்கு சென்றதே கிடையாது. நான் யார் தெரியுமா? உங்க நாட்டுக்கு எல்லாம் என்னால வர முடியாது என்பதை போலத்தான் டிரம்ப் ஏழை நட்பு நாடுகளை நடத்தி வந்தார்.
எத்தனை நாடுகள்
கடந்த மூன்றரை வருடங்களில் டிரம்ப் 20 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவர் இதில் அதிகமாக பயணம் செய்தது, பணக்கார ஐரோப்பிய நாடுகளுக்குத்தான். இவர் பிரான்ஸ் நாட்டிற்கு மட்டும் நான்கு முறை சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் ஒருமுறை சென்றுள்ளார். அதுவும் அங்கிருக்கும் அமெரிக்க ராணுவ தளவாடத்தை பார்க்கத் தான். இப்படி இருக்கும் ஒருவர்தான் இந்தியாவிற்கு முதல் முறையாக வருகிறார்.
இந்தியா வருகை
டிரம்பின் இந்திய வருகை கடந்த ஜனவரியில்தான் திட்டமிடப்பட்டது. இந்தியா வரும் 6வது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் டிவைட் ட ஏய்சன்ஹோவர். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவ தளபதியாக இருந்த அவர், அமெரிக்காவின் அதிபர் ஆனார். இந்தியா அவர் வந்ததே நான் கொடூரமானவன் இல்லை. சாந்தமானவன் என்பதை நிரூபிக்கத்தான்.
என்ன செய்தார் தெரியும்
சபர்மதி ஆசிரமம் சென்றது, காந்தி சமாதி சென்றது, தாஜ் மஹால் சென்றது, இந்திய பாராளுமன்றத்தில் அமைதி, உலக ஒற்றுமை குறித்து பேசியது, ராம் லீலா மைதானத்தில் சமத்துவம் குறித்து பேசியது என்று தன்னுடைய ராணுவ வீரன் இமேஜை டிவைட் ட ஏய்சன்ஹோவர் மாற்றிக்கொண்டார். அவருக்கு இந்திய பயணம் பெரிதும் உதவியது. டிரம்பும் தன்னுடைய இமேஜ் அரசியலுக்காகத்தான் இந்தியா வருகிறார்.
கிளிண்டன் எப்படி
அவருக்கு அடுத்து, இந்தியா வந்தவர் பில் கிளிண்டன். 20 வருடங்களுக்கு முன் அவர் இந்தியா வந்தார். அப்போது இந்தியாவில் வாஜ்பாய் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். அணு ஆயுத சோதனை காரணமாக அமெரிக்கா கோபமாக இருந்த காலம் அது. ஆனால் கிளிண்டன் வருகை பெரிய அளவில் பிரச்சனை ஆகவில்லை. கிளிண்டன் இந்திய பாராளுமன்றத்தில் பேசியது, இந்தியா - அமெரிக்கா உறவை வலுப்படுத்தியது. அதன்பின் கிளிண்டன் பாகிஸ்தான் சென்றதெல்லாம் வேறு கதை.
புஷ் எப்படி
அதேபோல்தான் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்ததும். வலதுசாரி கொள்கை கொண்ட புஷ் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதுதான் இந்தியா வந்தார். புஷ்ஷிற்கு அமெரிக்காவில் அவ்வளவு பெரிய ஆதரவு இல்லை. ஆனால் அவரின் இந்திய வருகை பெரிய அளவில் வைரலானது. அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக அவரின் இந்திய வருகை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்த அணு ஒப்பந்தமே இரண்டு நாட்டு உறவை வலுவாக்கியது.
ஒபாமா எப்படி
ஒபாமா - மன்மோகன் சிங் காலம்தான் இந்தியா - அமெரிக்க உறவில் பொற்காலம். நான் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். அறிவார்ந்தவர். புத்திசாலி என்று ஒபாமா நேரடியாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஒபாமா,மோடி பிரதமராக இருந்த போது இந்தியா வந்தது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒபாமாவும் மோடியை பெரிய அளவில் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி எளிமை
ஒபாமா, மன்மோகன் சிங் இருவரும் எளிமையானவர்கள். ஒபாமா, தான் போட்ட ஷூவையே மீண்டும் ரீ சைக்கிள் செய்து பயன்படுத்தக் கூடியவர். ஆனால் மோடியோ தன் பெயரை தங்கத்தில் பொறித்த உடைகளை அணிய கூடியவர். இப்படி இவர்கள் இருவருக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆனால் மோடியும், டிரம்பும் இருவரும் ஒரே மாதிரி கொள்கை கொண்டவர்கள்.
ஒரே மாதிரி
இருவரும் வலதுசாரி கொள்கை கொண்டவர்கள். இருவரும் நான், நான் என்று தன்னை பற்றி புகழ்ந்து பேச கூடியவர்கள். இருவருக்கும் இஸ்லாமியர்கள் என்றால் ஆகாது. இருவருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் நாட்டில் குடியேறுவது பிடிக்காது. இங்கே அகண்ட பாரதம்... அங்கே மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன். அங்கே மெக்சிகோ அருகே சுவர், இங்கே குஜராத்தில் சுவர். இப்படி பல விஷயங்களில் இரண்டு நாட்டு தலைவரும் செம க்ளோஸ்.
ஆனால் என்ன
இதற்கு முன் இந்தியா வந்த 5 அமெரிக்கா அதிபர்களும் உருப்படியாக நிறைய ஒப்பந்தங்களை செய்துள்ளனர். அதிபர் புஷ் கூட நிறைய ஒப்பந்தங்களை செய்துள்ளார். ஆனால், டிரம்ப் இந்தியா வரும் இந்த பயணத்தில் எந்த ஒப்பந்தமும் செய்யப்பட போவது இல்லை. ஆம் இந்தியாவிற்கு இதனால் பெரிய பலன் எதுவும் இல்லை. டிரம்பின் இந்த பயணத்தில், பின் வரும் விஷயங்கள் மட்டுமே நடக்க உள்ளது.
அதன்படி அகமதாபாத்தில் மக்கள் முன்னிலையில் பேசுவது.
சாப்பிடுவது
குஜராத்தை சுற்றிப்பார்ப்பது.
சாப்பிடுவது
காந்தி மடம் செல்வது.
ஆக்ரா செல்வது.
சாப்பிடுவது
டெல்லி அரசு பள்ளிக்கு செல்வது.. அவ்வளவுதான்.
சாப்பிடுவது
மோசம்
இந்தியா வரும் டிரம்ப் இந்தியாவிற்கு கொடுப்பதை விட இந்தியாவிடம் இருந்துதான் அதிகம் வாங்க போகிறார். அமெரிக்கா பொருட்கள் மீதான இந்தியாவின் வரியை குறைப்பது தொடர்பாக இன்று டிரம்ப் ஆலோசனை செய்ய உள்ளார் . இது தொடர்பான ஒப்பந்தங்கள் கண்டிப்பாக கையெழுத்தாகலாம். ஆனால் இதனால் இந்தியாவிற்கு பலன் எதுவும் இல்லை.
என்ன காதல்
அதேபோல் இந்த பயணம் அதிபர் தேர்தலின் போது தனக்கு உதவும் என்று டிரம்ப் நினைக்கிறார். முழுக்க முழுக்க டிரம்ப் மற்றும் அமெரிக்கா பயன் அடைய வேண்டும் என்றுதான் இந்தியா இப்படி ஒரு பயணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளது. முடிந்த வரை இந்தியாவை டிரம்ப் பல இடங்களில் பாராட்டி இருக்கிறார். ஆனால் பணம் என்று வந்துவிட்டால் அவர் இந்தியாவிற்காக இறங்கி வர மாட்டார். மோடி தமிழில் பேச முயற்சி செய்துவிட்டு, சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தது போலத்தான் இதுவும்.
இது கிட்டத்தட்ட எனக்கு உன்னை பிடிக்கும் ஆனால் காதல் எல்லாம் இல்லை என்பது மாதிரியான அன்புதான்.. ஒன்றாக சுற்றலாம், காபி குடிக்கலாம், சாப்பிடலாம்.. ஆனால் வேறு எதுவும் கேட்க கூடாது!