வேகமெடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்..நாளை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி
டெல்லி: நாட்டில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாளை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், நாட்டிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினரும் நாளை முதல் தடுப்பூசியைச் செலுத்தும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வளாகம் அல்லது மருத்துவமனை என விரும்பும் இடத்தில் நீதிபதிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பும் நீதிபதிகள் ரூ.250ஐ செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என்று இரண்டு வகையான தடுப்பூசிகளைச் செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் தங்களுக்கு என்ன தடுப்பூசி வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் பரவியது.
ஆனால், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள சுகாதார துறை, நீதிபதிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் தடுப்பூசியை தேர்ந்தெடுக்க முடியாது என்றும் கோ-வின் செயலியே தடுப்பூசிகளை முடிவு செய்யும் என்றும் விளக்கமளித்துள்ளது.