இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை.. நாடு முழுக்க விமர்சையாக கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து!
டெல்லி: நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டிற்கு இடையே அமைதியான முறையில் இன்று கொண்டாட்டம் நடைபெறுகிறது.
Recommended Video
கைலாசா மலையில் இருந்து விநாயகர் தனது தாய் பார்வதியுடன் பூமிக்கு வந்ததை கொண்டாடும் வகையிலும், அவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையிலும் இந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வடஇந்தியாவில் இந்த பண்டிகை திருவிழா போல பெரிய அளவில் கொண்டாடப்படும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதன்பின் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் கழித்து அதை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் அல்லது ஆற்றில் கரைப்பார்கள்.
அதேபோல் விநாயகருக்கு இன்று வித விதமாக கொழுக்கட்டை செய்து படைப்பார்கள். இந்த நிலையில் இந்தமுறை கொரோனா கட்டுப்பாட்டிற்கு இடையே அமைதியான முறையில் இன்று கொண்டாட்டம் நடைபெறுகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : நேரலையில் தரிசிக்கலாம்
தமிழகத்தில் பொது இடங்களில் சிலையை வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நாடு முழுக்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விநாயகப் பெருமானின் திருவருளால், நாடு முழுக்க எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகி, மகிழ்ச்சி உண்டாக வேண்டும். எல்லா தமிழக மக்களுக்கு நலமும் வளமும் பெற்று, சிறப்பாக வாழ்ந்திட வேண்டும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.