இதுதான் இத்தனை பிரச்சினைக்கு காரணமா.. ஜிலேபியே சாப்பிட மாட்டேன்.. கம்பீர் அதிரடி
Recommended Video
டெல்லி: நான் சாப்பிட்ட ஜிலேபியால்தான், டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருந்தால் நான் ஜிலேபி சாப்பிடுவதையே விட்டுவிடுகிறேன் என்று, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றுமாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த 15ம் தேதி காற்றுமாசு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 29 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 4 பேர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
கம்பீர் மிஸ்சிங்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு டெல்லியின் பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர், இந்தியா-வங்கதேசம் இடையே மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு டிவி வர்ணனையாளராக சென்று விட்டார்.
ஜிலேபி
கவுதம் கம்பீரின் இந்த செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. கவுதம் கம்பீரை காணவில்லை என்று டெல்லியில் பொதுமக்களாலும், எதிர்க்கட்சிகளாலும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூரில், அவர் ஜாலியாக சிரித்தபடி ஜிலேபி சாப்பிட்ட போட்டோவை அதில் இணைந்து, கம்பீரை காணவில்லை, கடைசியாக ஜிலேபி சாப்பிட்டபோது பார்த்தது.. என்று அதில் விமர்சனம் செய்யப்பட்டது.
ஒப்பந்தம்
இந்த நிலையில், கம்பீர், இன்று இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். காற்று மாசு குறித்த கூட்டம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால், இப்போட்டிக்கு வர்ணனை செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதமே ஒப்பந்தமாகி விட்டேன். மேலும், நான் அரசியலில் இணைந்தது ஏப்ரல் மாதத்தில். ஒப்பந்தத்தை மீற முடியாது என்பதால் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதையும் நான் முன்பே தெரியப்படுத்தினேன்.
ஜிலேபி சாப்பிடுவதில்லை
நான் ஜிலேபி சாப்பிட்டதால்தான் டெல்லியில், மாசு அதிகரித்திருந்தால், நான் இனிமேல் ஜிலேபியே சாப்பிடாமல் விட்டுவிடுகிறேன். என்மீது கவனம் செலுத்துவதை மாசுவை குறைப்பதில் ஆம் ஆத்மி அரசு, செலுத்தியிருந்தால் மக்கள் நிம்மதியாக சுவாசித்திருக்க முடியும். இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.