ரூ.1.76 லட்சம் கோடி என்ன ஆனது? ஆர்பிஐயிடம் பணம் வாங்கியும் கூட சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம்!
மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை பெற்றும் கூட இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
டெல்லி: மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை பெற்றும் கூட இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் பொருளாதார சீர்கேடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் வேலை வாய்ப்பு இல்லை. இன்னொரு பக்கம் வேலைகளில் இருந்து பலர் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். ஆட்டோமொபைல் துறை, தொழிற்துறை, உற்பத்திதுறை, ஐடி துறை என்று எல்லாம் ஒருசேர பாதிக்கப்பட்டு உள்ளது.
இதை சரிகட்ட மத்திய அரசு நிறைய நடவடிக்கைகளை எடுக்க முயன்றது. அதில் மிக முக்கியமானது ஆர்பிஐ அமைப்பிடம் அதிகமாக பணம் கேட்டது.
அதிர்ச்சியாக இருக்கிறது.. மிகவும் கவலை அளிக்கிறது.. இந்தியாவின் ஜிடிபியால் மன்மோகன் சிங் ஷாக்!
என்ன வருடம்
கடந்த ஒரு வருடமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டுக்கொண்டு இருந்தது. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் நிதி கேட்டது. ஆனால் ஆர்பிஐ இதை தொடர்ந்து மறுத்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியது.
என்ன ஒப்புதல்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.தொடர் பொருளாதார சரிவை சமாளிக்கும் வகையில் இந்த பணம் பெறப்பட்டது. இது ஆர்பிஐ அமைப்பின் உபரி நிதி ஆகும். இதை அவசரகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மத்திய அரசு மொத்தமாக பயன்படுத்தியது.
ஆனால் என்ன
ஆனால் இதை பெற்ற பின்பும் கூட நிதி நிலைமை சரியாகவில்லை. முக்கியமாக இந்தியாவில் இந்த நிதி ஆண்டிற்கான முதல் காலாண்டு ஜிடிபி 5% என்ற மிக மோசமான சதவிகிதத்தை தொட்டது. அதேபோல் தற்போதைய இரண்டாவது காலாண்டு ஜிடிபி 4.5 ஆக குறைந்தது. மத்திய அரசை இது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும் ஏற்படும்
அதனால் இந்த நிதி ஆண்டில் கண்டிப்பாக நிதி பற்றாக்குறை ஏற்படும், மூன்றாவது காலாண்டில் ஜிடிபி இறுதியாக மேலும் குறையும் என்று கணிக்கப்படுகிறது.ஆகவே இந்த நிதி ஆண்டின் இறுதியில் பணத்தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் மேலும் பணம் கேட்கலாம் என்று கூறுகிறார்கள்.
மேலும் பணம்
ஆம் ஏற்கனவே இடைக்கால ஈவுத்தொகையாக 30 ஆயிரம் கோடி ரூபாயை ஆர்பிஐ அமைப்பிடம் மத்திய அரசு கேட்க முடிவு செய்துள்ளது. பணத்தேவையை சரி செய்யும் வகையில் அரசு இந்த பணத்தை கேட்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.