புதிய இந்தியாவை உருவாக்க ஜெர்மன் நிபுணத்துவம் பயனுள்ளதாக இருக்கும்.. பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: ஜெர்மன் போன்ற நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சக்திகளின் நிபுணத்துவம் 2022 க்குள் "புதிய இந்தியாவை" உருவாக்க பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்,
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாட்டு தலைவர்களும் விண்வெளி, சிவில் விமானப் போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.
மோடி-ஏஞ்சலா சந்திப்பு
பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேர்க்கெல். இது ஒரு வருடத்தில் ஐந்தாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். . பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரு நாடுகள் ஒத்துழைப்பு
இதனிடையே இரு நாட்டு தலைவர்களும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இரு நாடுகள் தரப்பிலும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க பலதரப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.
ஜெர்மன் நிபுணத்துவம்
மேலும் அவர் கூறுகையில் "2022 க்குள் 'புதிய இந்தியாவை' உருவாக்குவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம், ஜெர்மனி போன்ற தொழில்நுட்ப, பொருளாதார சக்தி நிறுவனங்களின் நிபுணத்துவம் இதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பிரதமருக்கு நன்றி
இதையடுத்து ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல், எங்களுக்கு இங்கு கிடைத்த மிக அன்பான வரவேற்புக்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்துடன் இந்தியாவுக்கு நான் வருவது நான்காவது முறையாகும். மிகவும் சுவாரஸ்யமான திட்டத்தை எதிர்பார்க்கிறேன் என ஜெர்மன் மொழியில் பிரதமர் மோடியிடம் கூறினார்.
நிலையான வளர்ச்சி
தொடர்ந்து பேசிய அவர், ஜெர்மனியில் 20,000 இந்தியர்கள் படிக்கின்றனர். இன்னும் அதிகமாக வருவார்கள் என்று விரும்புகிறோம். தொழிற்பயிற்சிக்காக, ஆசிரியர்களையும் பரிமாறிக்கொள்ள விரும்புகிறோம். நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை பாதுகாப்பு குறித்து நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்ற உத்தேசித்துள்ளோம்" என்றார்.
காந்தி நினைவிடம்
முன்னதாக இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த ஏஞ்சலா மெர்கெல்லுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மிகப்பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவரை வரவேற்றார். பின்னர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த ராஜ்காட் சென்றார். இதனை தொடர்ந்து தான் பிரதமர் மோடியும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல்லும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.