காங். பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 'கலகக் குரல்' குலாம்நபி ஆசாத் விடுவிப்பு
டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தலைமைக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் 23 பேரை அணிதிரட்டி கடிதம் அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர் குலாம் நபி ஆசாத். குலாம் நபி ஆசாத், பாஜகவின் ஆதரவுடன் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் காங்கிரஸ் கட்சியில் எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு மாற்றங்களை அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டுள்ளார். அக்கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கும் புதிய மேலிடப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். முகுல் வாஸ்னிக், ஹரீஷ் ராவத், உம்மன் சாண்டி, தாரிக் அன்வர், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, ஜிதேந்திர சிங், அஜய் மாகென் ஆகியோர் புதிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
காங். செயற்குழு மாற்றியமைப்பு- தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ், உ.பி.க்கு பிரியங்கா நியமனம்
ஏற்கனவே பொதுச்செயலாளர்களாக இருந்த குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் அப்பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோனியா காந்திக்கு அமைப்பு ரீதியாக ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவில் அம்பிகா சோனி இடம்பெற்றுள்ளார். அக்குழுவில் ஏகே அந்தோணி, அகமது பட்டேல், கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.