குலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.? பலிக்கிறது அமித்ஷா ஆருடம்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் அதிருப்தி குரலை வெளிப்படுத்தி வருவதால் அக்கட்சி மிகப் பெரிய பிளவை எதிர்நோக்கி இருக்கிறது. இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமலேயே போய்விடும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கும் நிலையில் காங்கிரஸ் பிளவை சந்திக்க உள்ளது.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2-வது முறையாக மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது. தேசிய கட்சியான காங்கிரஸ் மாநில கட்சிகள் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகினார்.
நேற்று கலைஞர்.. நாளை ஸ்டாலின்.. அடுத்து உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்.. துரைமுருகன் கலகல!
இதனையடுத்து புதிய தலைவர் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள், சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பெரும் புயலை கிளப்பியது. காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகளை அந்த கடிதம் விமர்சித்தது.
குலாம் நபி பதவி பறிப்பு
இதன்விளைவாக குலாம்நபி ஆசாத்தின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதன்பின்னர் இந்த 23 மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் மேலிடம் எந்த ஆலோசன்னையும் நடத்துவதும் இல்லை. இந்த 23 பேரும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டனர்.
மீண்டும் கலகக் குரல்
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காவி தலைப்பாகை அணிந்து கொண்டு இந்த அதிருப்தி தலைவர்கள் பொதுக்கூட்டத்தை நடத்தினர். குலாம்நபி ஆசாத்துக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கொடுக்காமல் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு காங்கிரஸ் மேலிடம் முடிவுரை எழுத நினைத்தது. ஆனால் குலாம்நபி ஆசாத்தோ கலகக் குரலை முனைப்புடன் முன்னெடுத்து வருகிறார்.
பாஜக- குலாம்நபி
காங்கிரஸ் கட்சியில் பாஜகவுடன் நெருக்கமானவராக சந்தேகப் பார்வைக்குள்ளானவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட போது அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களும் சிறையில் தள்ளப்பட்டனர். ஆனால் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மோடி கண்ணீர்
மேலும் ராஜ்யசபாவில் குலாம்நபி ஆசாத்துக்கு வழியனுப்பும் போது, பிரதமர் மோடி கண்ணீர்மல்க உரையாற்றினார். குலாம்நபி ஆசாத்துக்காக தமது வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றார் பிரதமர் மோடி. தற்போது குலாம்நபி ஆசாத், அதிருப்தி தலைவர்களை ஓரணியில் திரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனந்த் ஷர்மா எதிர்ப்பு
அதேபோல் மேற்கு வங்கத்தில் ஐஎஸ்எப் என்கிற முஸ்லிம் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்தது ஆனந்த் ஷர்மா கடுமையாக எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டும் உள்ளார். காங்கிரஸ் கட்சியானது தற்போது மிகப் பெரிய பிளவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதே இந்த நிலவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
அமித்ஷா ஆரூடம்
காரைக்காலில் 2 நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் என சாடி இருந்தார். இப்போது அமித்ஷா கூறியபடிதான் காங்கிரஸ் பெரும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறது