அமரீந்தர் சிங் போல் தனிக் கட்சியை தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு அக்கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என கருத்து தெரிவித்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸிலிருந்து விலகிய கேப்டன் அமரீந்தர் சிங் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோடி அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது.
இந்த முடிவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இதை திரும்ப பெற வேண்டும், மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
2024 லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் காங்கிரஸ் வெல்ல முடியாது.. குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சி
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பேசினார். அவர் கூறுகையில் பிரிவு 370 குறித்து உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும். இல்லாவிட்டால் ஆளும் பாஜக அரசு முடிவு செய்யலாம். ஆனால் சட்டத்தை ரத்து செய்ததே ஆளும் பாஜக அரசுதான் என்கிற போது அவர்கள் எப்படி மீண்டும் கொண்டு வருவார்கள்? இந்த முடிவை திரும்ப பெற காங்கிரஸுக்கு 300-க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. கடவுள் நினைத்தால் இது நடக்கும். ஆனால் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்றார்.
சொந்த கட்சி
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சொந்த கட்சியையே இவ்வாறு குறைத்து மதிப்பிடுவது போல் குலாம் பேசியது அக்கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. கடந்த இரு வாரங்களாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸில் பல்வேறு பதவிகளில் உள்ள 20 பேர் கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி
அவர்களது ராஜினாமா கடிதத்தில் காங்கிரஸ் கட்சி பதவிகளில் ஏற்பட்ட மாற்றங்கள், காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிக் நீக்கம் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கட்சிக்குள் நிறைய பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் தலையிட்டு சரி செய்ய வேண்டும். குலாம் நபி ஆசாத் எங்கள் தலைவராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார் என்றார்கள். இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனிக் கட்சி தொடங்கினால் ஜம்மு காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு ஆதரவு கொடுப்பர் என தெரிகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்களும் அவர் கட்சி தொடங்கினால் அதில் இணைவர் என தெரிகிறது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கப்பட்டுள்ளதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
மரியாதை
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் குலாம் நபி ஆசாத்தை ஒட்டுமொத்த கட்சியும் மதிக்கிறது. அவரை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அவர் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். குலாமுக்கு நெருக்கமானவர்கள் பேசுவது ஒழுங்கீனத்தை ஆதரிப்பது போல் உள்ளது என்றார்.