கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் ஜம்மு காஷ்மீரின் குலாம் நபி ஆசாத்
டெல்லி: கேரளாவில் இருந்து ஜம்மு காஷ்மீரின் குலாம் நபி ஆசாத், ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தின் பதவி காலம் வரும் 15-ந் தேதி நிறைவடைகிறது. 2015-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபை மூலம் ராஜ்யசபா எம்.பி.யானார் குலாம் நபி ஆசாத்.
ஜம்மு காஷ்மீர் யூனியன்
தற்போது ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் குலாம் நபி ஆசாத் வேறு ஒருமாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.
கேரளா மூவர் பதவி முடிவு
கேரளாவை சேர்ந்த மூத்த காங். தலைவர் வயலார் ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் அப்துல் வகா, சிபிஎம் கட்சியின் கேகே ராகேஷ் ஆகியோரது பதவிக் காலமும் வரும் 15-ந் தேதி முடிவடைகிறது.
கேரளா நிலவரம்
தற்போதைய நிலையில் கேரளாவில் ஆளும் இடது முன்னணியின் சார்பில் 2 ராஜ்யசபா எம்.பிக்களையும் காங்கிரஸ் கட்சி ஒரு எம்.பியையும் தேர்வு செய்ய முடியும். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த கேசி வேணுகோபாலை ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கியது காங்கிரஸ்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்
இதனால் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத்தை கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக காங்கிரஸ் அனுப்பி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை இதில் நெருக்கடி ஏற்பட்டு குலாம்நபி ஆசாத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதும் காங்கிரஸ் விவாதங்களில் ஒன்று.