காஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தாம் ஆக்கிரமித்திருக்கும் கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்த இருக்கிறது.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது பாகிஸ்தான். இதில் ஒருபகுதியை சீனாவுக்கும் கொடுத்திருக்கிறது பாகிஸ்தான்.
கில்ஜிட்- பால்டிஸ்தானை உள்ளடக்கிய இந்த நிலப்பரப்பை ஆசாத் காஷ்மீர் என்று அழைத்து வருகிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் பிற மாகாணங்களைப் போல இதுவரை இப்பகுதிகளை இணைக்காமல் இருந்து வருகிறது. ஆசாத் காஷ்மீர் பகுதியானது சுயாட்சி பிரதேசமாகவே பாகிஸ்தானுடன் இணைந்து இருக்கிறது.
வின்டர் வந்தால் அவ்வளவுதான்.. இந்தியாவுடன் சமாதானம் செய்ய முயலும் சீனா.. பின்னணியில் ஒரே ஒரு காரணம்!
பாக். ஏன் இணைக்கவில்லை?
இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஆசாத் காஷ்மீர் நிலப்பரப்பு, இந்தியாவின் காஷ்மீருடன் ஒருங்கிணைந்த பகுதி என்பது ஒரு காரணம்; பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரையும் இந்திய காஷ்மீரையும் இணைத்து அகன்ற காஷ்மீர் தனிநாடு கோருகிறோம் என்கிற பயங்கரவாதிகள் மிரட்டலும் மற்றொரு காரணம்.
இந்திய வரைபடத்தில்...
மத்திய அரசின் கீழான ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதனையடுத்து புதிய இந்திய வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அத்தனை பகுதிகளும் ஆப்கான் எல்லை வரை இந்திய வரைபடமாக வெளியிடப்பட்டது. மத்திய அரசின் வானிலை அறிவிப்பு உள்ளிட்ட அத்தனை நடவடிக்கைகளும் கில்ஜிட்-பால்டிஸ்தானுக்கும் சேர்த்ததாகவே அமைந்துள்ளது.
மாகாணமாக மாற்றும் பாக்.
இதனால் அவ்வப்போது கில்ஜிட்- பால்டிஸ்தான் நிலப்பரப்பை மீட்கும் யுத்தத்தை இந்திய ராணுவம் நடத்தலாம் என்கிற யூகங்களும் பரபரப்பாக வெளியாகும். இந்த நிலையில்தான் கில்ஜிட்- பால்டிஸ்தானை பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக்கும் வகையில் தனி மாகாணமாக்க அந்த நாட்டு அரசு முடிவெடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
பாக். ஆத்திரமூட்டும் நடவடிக்கை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் ஆழிப்பேரலையான சுனாமியை வலிய வந்து பாகிஸ்தானே ஓடவிட்ட நிலைமையாகிவிடும். பாகிஸ்தானுக்கு பதிலடி தர இந்திய அரசு களத்தில் இறங்கும் சூழ்நிலையை வலிய திணிப்பதாகவே இது இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.