குஜராத் கூட்டு பலாத்காரம்.. பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு.. 2 வாரம் கெடு: உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானோவிற்கு இன்னும் இரண்டு வாரங்களில் 50 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு கெடு விதித்துள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மதக்கலவரம் நாட்டு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக படிந்துவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்த கலவரத்தின்போது மார்ச் 3ஆம் தேதி, பில்கிஸ் பானோ என்ற பெண்மணியின் மொத்த குடும்பமும் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது.
அப்போது பில்கிஸ் பானோ, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் ஈவு இரக்கமின்றி கலவரக்காரர்கள் அவரை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானோ படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 5 காவல்துறையினர் மற்றும் 2 டாக்டர்கள் ஆகிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்த ஏழு பேரை விடுதலை செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்கள் மற்றும் 2 டாக்டர்கள் ஆகிய ஏழு பேருக்கும் தண்டனை வழங்கியது. அதே ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம், ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று உத்தரவிட்டது.
காவல்துறையினரும், மருத்துவர்களும் ஆதாரங்களை அளித்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பானோ அடைந்துள்ள இழப்பு மிக அதிகம் என்பதால், அவருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குஜராத் அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. குஜராத்தில் இதுபோன்று பாதிக்கப் பட்டவர்களுக்கு என்று, ஒரு இழப்பீட்டு நடைமுறை உள்ளது. அதன்படிதான் இழப்பீடு வழங்க முடியும் என்று குஜராத் அரசு கூறியது. ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை பில்கிஸ் பானோவுக்கு வழங்க வேண்டும் மற்றும் அவருக்கு வேலை வாய்ப்பும், குடியிருக்க வீடும் வழங்கிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.