அயோத்தி.. 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்க மறுத்தால் எங்களிடம் தாங்க: ஷியா தரப்பு கோரிக்கை
டெல்லி: அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் நிராகரித்தால், அதை தங்கள் தரப்புக்கு தர வேண்டும் என ஷியா வக்ஃபு வாரியம் கோரிக்கைவிடுத்துள்ளது.
அதேநேரம், அந்த நிலத்தில் மருத்துவமனை அமைப்பதற்குப் பயன்படுத்துவோமே தவிர, மசூதி அமைக்க பயன்படுத்த மாட்டோம் என்று அதன் தலைவர் வாசீம் ரிஸ்வி கூறியுள்ளார்.
ஷியா வஃக்பு வாரியம் இதுதொடர்பாக, நீதிமன்றத்தை அணுகாது, ஆனால் நிலத்தை அரசிடம் கோருகிறது என்றும் அவர் கூறினார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற, மிக முக்கியமான வழக்கில், உச்சநீதிமன்றம், கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்புக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. ராமர் கோவில் அமைக்க, ஒரு அறக்கட்டளை நிறுவப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், முஸ்லீம்களுக்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திடம், அரசு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில், முஸ்லீம்கள் தரப்பாக வாதிட்டது, உத்தர பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் என்பதால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரதமருக்கு மட்டுமே ஸ்பெசல் பாதுகாப்பு.. லோக்சபாவில் தாக்கலானது எஸ்பிஜி சட்ட திருத்த மசோதா
இந்த தீர்ப்பு தொடர்பாக சன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவின. சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்றும், வேண்டாம் என்றும் சன்னி வக்ஃப் வாரியத்தில் இருவேறு கருத்துக்கள் இருந்தன. இதுகுறித்து, முடிவு செய்ய, லக்னோவில் நேற்று, சன்னி வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
அதேநேரம், 5 ஏக்கர் நிலம் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில வழக்கில் முக்கிய வழக்குதாரர்களில் ஒரு தரப்பான, சன்னி வக்ஃப் வாரியம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்கலாமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதேநேரம், சர்ச்சைக்குரிய இடத்திற்கு ஷியா வக்ஃபு வாரியம் உரிமை கோரியதை ஐந்து நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்திருந்த நிலையில், அந்த வாரியம், நிலம் தேவை என்கிறது.