பிளாஸ்டிக்கிற்கு நோ.. பாஜக தலைமை அலுவலகத்தில் செம கட்டுப்பாடு.. நெட்டிசன்கள் வரவேற்பு!
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு வாட்டர் பாட்டில் போன்ற ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது அடுத்த தேர்தல் பரபரப்பிற்கு தயாராகி வருகிறது. மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அடுத்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதே மாதம் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாஜக சார்பாக தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.
பிரதமர் மோடி இதற்கு முன் மார்ச் மாதத்தில் பாஜகவின் தேர்தல் கமிட்டி உடன் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அதன்பின் அவர் செய்த சுதந்திர தின உரையில், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பேசினார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் தற்போது பாஜக தலைமை அலுவலகத்தில் மொத்தமாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ட்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக வாட்டர் பாட்டில்கள் எல்லாம் மொத்தமாக கைவிடப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் பாஜக மீட்டிங்கிலும் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்படவில்லை. இதற்கு பதிலாக அங்கு வரும் நபர்களுக்கு கிளாஸ் ஜாரில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெட்டிசன்கள் பலர் இந்த நடவடிக்கையை பாராட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .