காங்கிரஸ் கட்சியில் இணைந்த கோட்சே ஆதரவாளர்... மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
டெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. விரைவில் அம்மாநிலத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, பாஜக ஆளும் குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதால், இத்தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில், மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேயின் ஆதரவாளரான பாபுலால் சவுராசியா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபுலால் சவுராசியாவை மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் வரவேற்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் NALCO India நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அப்போ இதை படிங்க
காங்கிரஸ் விளக்கம்
இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரவீன் பதக் கூறுகையில், "பாபுலால் சவுராசியா முன்பு காங்கிரசில் தான் இருந்தார். ஆனால், அவர் கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் இந்து மகாசபா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராகுல் காந்திகூட அவரது தந்தையைக் கொன்ற கொலையாளிகளை மன்னித்துவிட்டார். அவர்கள் மிகப் பெரிய மனம் கொண்டவர்கள். இதனாலேயே கோட்சேவை வணங்கும் நபர் காந்தியை இப்போது வணங்க தொடங்கியுள்ளார்"என்று கூறினார்.
காரணம் என்ன?
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர்-சம்பல் பகுதியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மிகவும் வலுவாக உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று. அவருக்கு போட்டி அளிக்கும் வகையிலேயே பாபுலால் சவுராசியாவை காங்கிரசில் சேர்த்துள்ளனர்.
பாஜக விமர்சனம்
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தாரி கூறுகையில், "உள்ளாட்சி தேர்தல் அச்சம் காரணமாகவே பாபுலால் சவுராசியாவை அவர்கள் அழைத்துள்ளனர். கடந்த மாதம் கமல்நாத் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானிடம் நீங்கள் மகாத்மா காந்தியின் பக்கமா அல்லது நாதுராம் கோட்சே பக்கமா என்று கேட்டார். இப்போது கமல் நாத் இந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.
யார் இந்த பாபுலால் சவுராசியா
கடந்த 2019ஆம் ஆண்டு காந்தியை கொன்ற கோட்சேவின் கருத்துக்களை நாடு முழுவதும் பரப்புவேன் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் பாபுலால் சவுராசியா. இவர் கோட்சேவுக்காக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார். பாபுலால் சவுராசியா உள்ளாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே நாட்டில் கோட்சேவுக்கு என தனியாக கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.